தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்? பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை நீங்களே மீறுவீர்களா? லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பொது முடக்கம் அமலில் உள்ள காலத்திலேயே நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கில் டாஸ்மாக்கை திறப்பதுபோல் அல்ல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. டாஸ்மாக் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை. ஜூன் 15-ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம். ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். அப்போது, தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா அதிகரிக்கும் என்பதால், இதுவே 10 வகுப்பு தேர்வை நடத்த சரியான நேரம் என்றும், தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக அரசு தரப்பில் தேர்வு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
‘கொரோனா பாதிப்பை பொருத்தவரை தற்போது அபாய நிலை இல்லை. அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவதால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது, பேராபத்தாக முடியும்.’ என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இவ்வாறு அடுத்தடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்தும் நீதிபதிகள் ஏற்கவில்லை. உடனே தேர்வை நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை, தேர்வை தள்ளி வைக்க முடியுமா என பரிசீலனை செய்யுங்கள் என கூறினர். அத்துடன், தமிழக அரசு சார்பில் கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 10ம் வகுப்பு தேர்வு தொடர்பான மற்ற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.