தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அபிஷேக் கோயங்கா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் மூலம் தனிமைப்படுத்தும் இடங்கள், சிகிச்சையை கட்டணத்தின் அடிப்படையில் தொடங்க வேண்டும். கோவிட்-19 நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க கட்டண நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவிட்-19 நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு அடுத்த 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தில் சிகிச்சையளிக்க முடியாதா என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளும் தங்களின் பதிலை விரிவாக 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.