tamilnadu

img

கோவிட்-19 பரிசோதனை: கட்டணம் நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கோவிட்-19 பரிசோதனைக்கு ஒரே கட்டணத்தை நிர்ணயிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,574 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கோவிட்-19 பரிசோதனைக் கட்டணத்தில், சில மாநிலங்களில் ரூ.2,200 ஆகவும், சில மாநிலங்களில் ரூ.4,500 ஆக உள்ள நிலையில், இதற்கென நாடு முழுவதும் ஒரே கட்டணத்தை நிர்ணயம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, சோதனைகளுக்கான கட்டண வரம்பை மாநிலங்கள் தீர்மானிக்க அனுமதிக்குமாறு, அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.  மேலும், மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவதால், குறைந்த கட்டணத்தை பற்றி விவாதிக்க முடியும் என்று அவர் கூறினார். அவரது கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம், மத்திய அரசு தான் அதிகபட்ச கட்டண வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.