சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி,ஜூலை 2- சாத்தான்குளம் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வணிகரான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாத்தான் குளம் காவல் ஆய்வாளர்,இரண்டு உதவி ஆய்வாளர்கள், 2 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடூர சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாகக்கூறி ஜூன் 19 அன்று இரவு காவல்துறை யினர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து கேட்கச்சென்ற அவரது மகன் பென்னிக்சையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு இரண்டு பேரையும் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். பிற்பகலில் கோவில்பட்டி கிளைச் சிறையில் இரண்டு பேரையும் அடைத்தனர். ஜூன் 22 அன்று உடல்நிலை மோசமானதால் பென்னிக்ஸ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ஜூன் 23 அன்று இவரது தந்தை ஜெயராஜ் இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாநிலம் தழுவிய அளவில் வணிகர்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வணிகர்கள் கொலைச் சம்பவத்தை கண்டித்தன. மார்க்சிஸ்ட் கட்சி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சாத்தான் குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
நீதிமன்றத்தில்...
ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் உயர்நீதி மன்ற மதுரை கிளையும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ் திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு சென்றார். ஆனால், விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் ஜூலை 1 அன்று மாலை இந்த வழக்கின் கோப்புகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது.
நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசார ணை மேற்கொண்டனர். சாத்தான்குளம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையின் அருகில் உள்ள மற்ற கடைக்காரர்களிடமும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகி யோரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடமும் விசார ணை நடத்தினர்.
பெண் காவலர் முக்கிய சாட்சியம்
ஜெயராஜ், பென்னிக்சை காவல் அதிகாரிகள் விடிய விடிய தாக்கியதாக சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் ரேவதி, விசாரணையில் தெரிவித்தார். இவர் கூறியது வழக்கில் சாட்சியமாக விளங்கியது. நடந்ததை தைரிய மாக கூறிய காவலர் ரேவதியை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினர். அவருக்கு முழுச்சம்பளத்து டன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்; அவரது குடும்பத் திற்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
இந்தப் பின்னணியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை விசார ணைக்கு அழைத்துச்சென்ற உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்து ராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷை புதனன்று இரவு நாங்குநேரி அருகில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நள்ளிரவே நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப் பட்டு தூத்துக்குடி பேரூரணி கிளைச் சிறையில் அடைக்கப் பட்டார். வியாழனன்று காலை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் கைதையும் சிபிசிஐடி போலீசார் உறுதி செய்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது புகார் கொடுத்த தலைமைக்காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு காவல் துறை தந்த சியூஜி அலைபேசி எண்ணை புதனன்று மதியம் வரை ஆனில் வைத்திருந்த வர், பின் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்தார். ஸ்ரீதர் தனது இருப்பிடத்தை வள்ளியூர், கோவில்பட்டி என்று மாற்றியபடியே இருந்தார். இந்நிலையில் வியாழனன்று அதிகாலை ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடிவில் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.