tamilnadu

img

ராஜீவ் கொலை கைதி: ரவிச்சந்திரனுக்கு பரோல் குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுத்திடுக!

மதுரை,அக்.15- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் உள்துறை (சிறைத்துறை) அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகன் இதுவரை நான்கு முறை மட்டுமே விடுப்பில் வந்துள்ளார்.  ரவிச்சந்திரனுக்கு நீண்ட நாள் பரோல் கோரி 2018 டிசம்பரில் வழக்கு தொடர்ந்த போது நீண்டகால பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை. ஆகவே புதிதாக மனுத்தாக்கல் செய்தால், ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றமும் புதிதாக மனுத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியிருந்தது. அதன டிப்படையில் கடந்த மார்ச் 27-ல் எனது மகன் ரவிச்சந்திர னுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக் கோரி மனு  அளித்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை. ஆகவே எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத கால சாதாரண விடுமுறை வழங்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை செவ்வாயன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.இதில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் உள்துறை (சிறைத்துறை) அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.