சென்னை,நவ.22- ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி விடுதியில் கடந்த 9ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீபின் உடல் தூக்கில் தொங் கிய நிலையில் மீட்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் உள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ-யில் பணியாற்றிய அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐஐடியில் மர்ம மரணங்கள் தொடர்ந்து வருவதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.