tamilnadu

img

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுக்க என்னை அறிவுறுத்த முடியாது - கர்நாடகா சபாநாயகர்

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி  அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. 
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை  பலத்தை இழந்து விட்டதால் குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம்  கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இதனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.

இதற்கிடையே  10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தது சட்ட விரோதமானது என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறி உள்ளனர்.   இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பது பற்றி இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு உயர்நீதிமன்றம் தனக்கு அறிவுறுத்த முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்  வழக்கு தொடர்ந்து உள்ளார்.  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சபாநாயகரின்  கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நாளை இந்த  மனு விசாரிக்கப்படும்  என கூறி உள்ளது.