சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற ஊழல் தடுப்புப்பிரிவு பதிவாளரை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சதீஷ் குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நீதித்துறை பணியில் கடந்த 2011-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் சேர்ந்த பூர்ணிமா தற்போது சென்னை உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளராக இருந்து வருகிறார். இவர் சட்டக்கல்லூரிக்கு செல்லாமல் நேரடியாக தேர்வை எழுதி சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள் ளார். மேலும், வழக்குரைஞராக பூர்ணிமா பதிவு செய்யும் போது தமிழ்நாடு பார் கவுன்சில் இதனை கண்டறிய தவறி விட்டது.
மேலும், தற்போது சென்னை உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளராக பதவி வகிக்கும் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை முறையாக முடித்ததற்கான ஆவணங்களும் இல்லை. எனவே அவரை அந்த பணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 10 ஆம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப் பும், பின்னர் மைசூரில் சட்டப் படிப்பை முடித்து பூர்ணிமா நீதித் துறை பணியில் சேர்ந்துள்ளார். எனவே தமிழக அரசின் அரசாணையின்படி பூர்ணிமா பதவியில் நீடிக்க தகுதியில்லை என வாதிடப்பட்டது.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதிவுத் துறையிலிருந்து பெற்றப்பட்ட சான்றிதழ்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்பு பதிவாளர் பூர்ணிமா, கடந்த 1984-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பில் 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்து, அந்த சான்றிதழை காணொலியில் காட்டினர்.இந்த வழக்கு மூலமாக நீதித் துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக மனுதாரரான வழக்குரைஞர் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அற்ப காரணங்களுக்காக வழக்குகள் தொடர்ந்துள்ளதாக கூறி , மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரர் சதீஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் அக்டோபர் 20 ஆம் தேதி மனுதாரர் சதீஷ்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடியும் வரை எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக ஆஜராகக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.மேலும் இந்த மனு விசாரணைக்கு வரும் முன் பூர்ணிமாவுக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கை செய்தியாக வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.