விநாயகர் சதுர்த்தி நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை திரும்பப் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மிழக அரசு கடந்த 13-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவும் சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மனுதாரர் மனுவை திரும்ப பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதி பொங்கியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.