விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு எதிரான வழக்கில், கீழ் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு நடந்த விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்சத ராட்டின விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கலைச்செல்வி மற்றும் அவருடைய 12 வயது மகள் பாவன பிரியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் சிறுமி பாவன பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை பாபு நீலாங்கரை காவல்நிலையத்தில், புகார் அளித்தார். வழக்கை விசாரித்த காவல்துறை விபத்தில், சிறுமிக்கு காயம் மட்டுமே ஏற்பட்டதாக கூறி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துது பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்களின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, சிறுமியின் தந்தை பாபு, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உரிய விசாரணை மேற்கொண்டு, உத்தரவுகளை வழங்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.