tamilnadu

img

பில்கிஸ்பானு வழக்கு: குஜராத் அரசுக்கு 2 வாரம் கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு 

பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு 2வாரம் அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் பெரும் வன்முறை ஏற்பட்டது. அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது.
அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் தாக்கி, கூட்டுப் பலாத்காரம் செய்தது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இரக்கமின்றிக் கொலை செய்த தோடு அவரின்  இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்தது. 
இந்த வழக்கில் 11 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் ஒரு காவலர் மருத்துவர் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலைசெய்தது. . இதைத்தொடர்ந்து பில்கிஸ் பானு தரப்பில் 7 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2017 ம் ஆண்டு மே 4ம் தேதி அளித்த தீர்ப்பில் 2 மருத்துவர்கள் 5 காவலர்களையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . இந்த தீர்ப்பை  உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. 
இதையடுத்து தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், பணி, அரசுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கடந்த 5 மாதங்களாக குஜராத் அரசு பில்கிஸ் பானுவுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்கவில்லை. மேலும் நிவாரணத் தொகை குறித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி குஜராத் அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.ஏ.போப்டே, எஸ்ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. குஜராத் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, "இந்த வழக்கில் பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், வீடு, வேலை ஆகிய வழங்க கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஏன் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவில்லை" எனக் கேள்வி எழுப்பியது.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், " இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஏற்கெனவே மாநில அரசிடம் இருக்கிறது. அதனால்தான் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தோம்" எனத் தெரிவித்தார்.
அதற்கு தலைமை நீதிபதிகள், போப்டே, நசீர் ஆகியோர், " இந்த வழக்கில் உள்ள உண்மைத்தன்மை, ஆதாரங்கள் அடிப்படையில்தான் மிகப்பெரிய இழப்பீட்டை அறிவித்தோம்" எனத் தெரிவித்தனர்.