பென்னாகரம் அருகே ஆலங்கட்டி மழை
பென்னாகரம், மே 24-பென்னாகரம் அருகே ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அஜ்ஜனஅள்ளி, முங்கில்மடுவு, சோழப்பாடி, தின்ன பெல்லூர் மற்றும் இராமகொண்டஅள்ளி, செல்லமுடி, நெருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில்வியாழனன்று மாலையில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.ஏரியூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்று வந்த நிலையில், சூறைக்காற்று வீசியதாலும், ஆலங்கட்டி மழை பெய்ததால் கடைகளில் வியாபாரம் பாதித்தது. மேலும், ரூ.20 லட்சம் மதிப்புள்ள பருப்பு, மிளகாய், சோளம் மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. சூறைக்காற்றால் ஏரியூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்தன.இதில் ஏரியூரை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. சாலையில் மரங்கள் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்கள் போராட்டம்
ஈரோடு, மே 24-பொள்ளாச்சி, ஈரோடு நாடாளுமன்றதொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையின்போது விவரங்களை அறிவிக்க தாமதமானதால் செய்தியாளர்கள் வியாழக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழனன்று நடைபெற்றது. காலை பொள்ளாச்சி தொகுதியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் 9.30 மணியாகியும் அறிவிக்கப்படவில்லை. இதனால் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் நடைபெற்றது. இங்கும் முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு மேலாகியும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.