கோபிசெட்டிபாளையம், ஏப்.9-
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஒன்றியத்தில் கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஒன்றியத்தில் வேமாண்டம்பாளையம், பட்டிமணியகாரன்பாளையம், அஞ்சானூர், இருகாலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் புதனன்று இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அக்கிராமங்களில் 30க்கும் மேற்பட்டவீடுகளின் மேற்கூரைகள் சூறாளிக்காற்றில் பறந்து சேதமடைந்தது. மேலும் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கறிக்கோழி வளர்ப்பு கொட்டகைளும் சரிந்து விழுந்து 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டகோழிக்குஞ்சுகள் உயிரிழந்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ரஸ்தாளி, தேன்கதிர், செவ்வாழை உள்ளிட்ட பல ரக வாழைகள் சூறாவளிக் காற்றில் சாய்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் கடும் சேதடைந்துள்ளது. மற்றும் தென்னை மரங்கள், பப்பாளி மரங்கள் என இப்பகுதிகளில் கடும் சேதத்தை சூறாவளிக் காற்று ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசுஉரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும், தனிநபர் பயர் காப்பீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல், கடந்த 15 நாட்களாக 144 தடை உத்தரவினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் பொருளாதாரத்தில் மிகவும் சிரமங்கள் சந்தித்துவரும் நிலையில் தற்போது வீடுகளும் சேதடைந்துள்ளதால் எங்கு சென்று தங்குவது என்று தெரியாமல் உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சேத மதிப்புகள் குறித்து வருவாய்துறை மற்றும் வேளாண்மைத்துறையினர் கணக்கெடுப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் ஆய்வு
இதற்கிடையே, இப்பகுதிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டு விவசாய பயிர்கள் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை துரிதப்படுத்தினார். மேலும் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் உரிய இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். பின்னர் சேதமடைந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளவர்களுக்கு வீடுகளை சரி செய்யவும் அதுவரை தங்குவதற்கும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளும்படி வருவாய்துறையினருக்கு உத்தரவிட்டார்.