ஈரோடு:
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று ஆஜரானார்.
2018 ஆம் ஆண்டில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என முகநூலில் எச். ராஜா பதிவிட்டிருந்தார். இதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டிருந்தார். எச்.ராஜா பதிவு தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் முன்னாள் அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர்செல்வராஜ் ஆகியோர் சார்பில் ஈரோடு நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில், வழக்கு பதிவுசெய்யப் பட்டு 2 ஆண்டுகள் கடந்து தற்போது முதல்முறையாக ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல்,எச்.ராஜா செப்டம்பர் 21 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.