ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தால், பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது அவ்வப்போது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதன் காரணமாக ஈரான் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை சுமார் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் தியாகிகள் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரும் வன்முறைச் வெடித்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 36 பேர் பலியாகினர்
இச்சம்பவம் குறித்து ஈரான் ஜனாதிபதி ரவ்ஹானி கூறியதாவது.
“மக்களுக்குப் போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் இது வன்முறை. நாங்கள் வன்முறையினால் நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்றார்.
வன்முறை காரணமாக ஈரானில் சமூக வலைத்தளப் பயன்பாடும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக விலை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.