சென்னை, ஜுன் 18 - தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை, கடந்த வாரம் விசாரித்த உயர்நீதி மன்றம், சென்னையில் குடிநீர் பிரச்சனையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் தலைமை யிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2017ம் ஆண்டு பருவமழை பொய்த்து, சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால், விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு 830 மில்லியன் லிட்டரிலிருந்து, 525 மில்லியன் லிட்டராகக் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் மூலம், தற்போது சென்னைக்கு ஒரு நாளைக்கு 180 மில்லி யன் லிட்டர் வழங்கப்படுவதாகவும், நாளொன்று க்கு 900 லாரிகள் மூலமும், குறுகிய சாலைகளில் சிறிய லாரிகள் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பதில் மனுவை படித்துப் பார்த்த நீதி பதிகள் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி களை முன்வைத்தனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை எடுத்த நடவடிக்கைகள், ஏரி, குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், மழை நீர் வீணாக கடலில் கலப் பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் மாற்று ஏற்பாட்டிற்கு எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் வற்றி வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் மழை நீர் சேமிப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதால் என்ன பலன் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் நீர் மேலாண்மை நடவடிக்கையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை பூஜ்ஜியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பருவமழை பொய்த்துப் போனதால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சோழவரம் ஏரி 38 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கடல் நீரை குடிநீராக்கும் மூன்றாவது யூனிட் செயல்படத் துவங்கிவிட்டால் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பருவ மழையை எதிர்பார்க்கத் தேவையில்லை எனவும் அவர் விளக்கமளித்தார். இதையடுத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்பவும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.