இளையராஜா 75
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் மென்மையாக ஒலிக்கும் பன்மொழி தாலாட்டுப் பாடல்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா தெரியாது. ‘மன்னுபுகழ் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே’ என்ற (குலசேகர ஆழ்வார்: பெருமாள் திருமொழி) அந்த அற்புதமான பாடலை, இப்போது இரவு நேரத்தில் மெல்ல பாடத் தொடங்கினால் போதும், கல்லூரியில் சேர்ந்திருக்கும் எங்கள் மகன் இதமாக உறங்கத் தொடங்கி விடுவான். தாகூரின் அற்புதமான வங்க மொழி தாலாட்டுப் பாடல் உள்பட தொகுக்கப்பட்டிருக்கும் இந்த இசை ஒலிப்பேழையை, அவனைக் கருவுற்றிருந்த காலத்தில், இரவு நேரங்களில் அன்றாடம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் அவனது தாய். குழந்தைப் பருவத்தில் ஒலிக்கக் கேட்ட தாலாட்டுப் பாடலை வாழ்நாள் முழுக்க எப்போது கேட்டாலும் அதே உணர்வோடு ரசிக்கத் தோன்றும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டுத் தொடக்கவுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் தோழர் சீத்தாராம் யெச்சூரி. தாலாட்டுப் பாடல் மட்டுமல்ல; எந்தப் பாடலானாலும், இசையில் தோய்ந்த எந்த உயிருக்கும் அந்த இசையின் பரிச்சயம் வாழ்நாள் முழுக்க உணர்வில் கலந்திருக்கும்.
‘காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும் பாட்டின் சுவையதனைப் பாம்பறியும்’ என்றுரைப்பார் என்றார் மகாகவி. இசைபட வாழ்தல் என்பது காதில் இசைபட வாழ்தல் அன்றி வேறென்ன? இந்தப் பாடல் என்ன ராகம், பாடலை எழுதியவர் யார், இசையமைத்தவர் யாரோ, பாடியதுதான் எவர் என்ற எந்தக் கேள்விக்கும் விடை தெரியாமலேயே ஒரு பாட்டை ரசிக்க முடியும். உருக முடியும். மனத்தைப் பறிகொடுக்க முடியும். ‘பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான் ‘ என்று கரகாட்டக்காரன் டைட்டில் பாட்டில் சொல்லிக்கொள்ளும் இசை ஞானிக்கு 75 வயது என்பது, தமிழ்த்திரை இசையின் பயணத்திலும் முக்கிய மைல் கல்! ‘அன்னக்கிளி உன்னத் தேடுதே’ என்று குரலெடுத்து தமிழ்த் திரையில் ராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த் திரை ரசிகர்களது உலகம். ‘மச்சானைப் பாத்தீங்களா ‘ என்று எஸ்.ஜானகி இழைத்த கிராமிய மெட்டு, அதுவரை அவர் அதிகம் அறியப்படாத விதத்தில் அடையாளப்படுத்தியது. (‘இல்ல, எனக்கு சிங்கார வேலனே ஜானகியைத் தான் தெரியும்’ என்று அவள் அப்படித் தான் படத்தில் கமல் ஹாசன் பேசுவதாக வரும் வசனம், நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இந்தப் பாடலை உட்கொண்ட விதத்தை பிரதிபலிக்கும்). அதிகமாக எம். எஸ். வி., கொஞ்சம் கே. வி. மகாதேவன், கொஞ்சம் கொஞ்சம் வி. குமார், ஜி. கே. வெங்கடேஷ், சந்திரபோஸ், சங்கர் கணேஷ்....என்று போய்க் கொண்டிருந்த இசை வரிசையில், இளையராஜா வருகை மெல்ல மெல்ல கவன ஈர்ப்பாக மாறிக் கொண்டிருந்தது. வாத்தியார் படம், தலைவர் படம் என்பது மாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே காலகட்டத்தில் இசையமைப்பாளரை வைத்துப் படத்தைப் பேச வைப்பதில் பெரிய சாதனை படைத்தவர் இளையராஜா.அவரது இசைக்காகவே படங்கள் வெற்றி பெறத்தொடங்கின.பேசப்பட்டன. தில்லானா மோகனாம்பாள் கதையை உல்டா பண்ணி எடுத்த திரைக்கதை, ராமராஜன் கனகா நடிப்பு என்பதை விட, கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக்காகவும், ராஜா இசைக்காகவுமே ஓராண்டு முடிந்தும் ஓடிக் கொண்டிருந்தது கரகாட்டக்காரன். இன்னொரு பக்கத்தில், வலுவான திரைக்கதை, அமர்க்களமான நடிப்பு என்றாலும், ராஜா இசையினால் மேலும் புகழோடு ஓடிய படங்கள் வரிசையில் சிந்து பைரவி, முதல் மரியாதை, புன்னகை மன்னன், தேவர் மகன், நாயகன், தளபதி என்று ஒரு பெரிய பட்டியல் உண்டு.
வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், ‘என் கண்மணி உன் காதலி’ பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும். ராக்கம்மா கையத் தட்டு (தளபதி) பாடலினூடே ‘குனித்த புருவமும்’ என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என ராஜாவின் சிறப்புக்கள் ஏராளமானவை.‘தென் பாண்டிச் சீமையிலே’ (நாயகன்) பாடலின் இழைப்பில் தெறிக்கும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சோகத்தின் பிழிவு, கதையின் ஆவேச பகுதிக்கேற்ற பாவங்களோடு வாணி ஜெயராம் குரலில் ஒலித்த “கவிதை கேளுங்கள்” (புன்னகை மன்னன்) பாடலின் அசாத்திய இசைக் கலவை, துள்ளாட்டம் போடும் ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’ (மௌன ராகம்), மெல்லென்ற தென்றலாக வீசும் ‘என் இனிய பொன் நிலாவே’ (மூடுபனி), நெகிழ வைக்கும் ‘ஒன்ன நெனச்சே பாட்ட படிச்சேன்’ (அபூர்வ சகோதரர்கள்) என்று அவரது இசையில் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போய்க்கொண்டிருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகள் உண்டு.
கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (பொன்மாலைப் பொழுது - நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை) விளைந்தது. கவிதை வரிகளின் அழகு, இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை. அற்புதமான பாடகர்களின் மிக அருமையான பாடல்கள் ராஜாவின் இசையில் மிதந்து வந்தது ரசிகர்களது பொற்காலம். பாலமுரளி கிருஷ்ணாவின் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ (கவிக்குயில்), ஜேசுதாஸின் ‘கலைவாணியே ..’ (சிந்து பைரவி), டி. எம். சவுந்திரராஜனின் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்’ (தீபம்), பி. சுசீலாவின் ‘ராகவனே ரமணா’ (இளமை காலங்கள்), எஸ். ஜானகியின் ‘ராசாவே உன்னை நம்பி’ (முதல் மரியாதை), எஸ்.பி.பி.யின்‘இளைய நிலா’ (பயணங்கள் முடிவதில்லை), வாணி ஜெயராமின் ‘நானே நானா...’ (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) என்று சொன்னால், இதைப்போலவும் இதைவிடவும் இனிமையான வேறு பல பாடல்களது பட்டியலை வேறொரு ரசிகர் சொல்லக் கூடும். அதுதான் ராஜா!
பத்ரகாளி படத்தின், ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ பாடல் மொத்தத்தையும் இந்த முதல் வரியை வைத்தே பாடி விட முடியும். அப்படியான ஒரு மெட்டு அது. தாளக் கட்டின் நயத்தை, ‘வளையோசை கலகல’ (சத்யா), ‘பூவை எடுத்து ஒரு மாலை’ (அம்மன் கோவில் கிழக்காலே), ‘மணியே மணிக்குயிலே’ (நாடோடி தென்றல்) போன்ற பல நூறு பாடல்களில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். பனி விழும் மலர் வனமும் (நினைவெல்லாம் நித்யா), தென்றல் வந்து தீண்டும் போதும் (அவதாரம்), மழையும், சாரலும், பனியும், வெயிலும் எல்லாமே இசையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கும் ஒரு வித்தகருக்கு வயது 75 என்பது இசை ரசிகர்களது சொந்த பிறந்த நாள் கொண்டாட்டமே தான்!பாவலர் வரதராஜனின் சகோதரர், முற்போக்கு மேடைகளில் ஒலித்த தொடக்க காலம் என்ற வரலாற்றின் நீட்சி, திரை இசையில் சாதித்த புகழின் பின்புலத்தில் எப்போதும் நினைவு கூரப்படும். எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலந்திருந்த நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! நட்பு புதுப்பிக்கப்படும் காலங்கள் ரசிகர்களது ஆர்ப்பரிப்பு நேரமாக அமையும். ‘என் பாட்டைக் கேட்டாக்கா, ஊரு சனமெல்லாம் மெய் மறக்கும், அது உசுரோடு போய்க் கலக்கும்’ என்று தமது சொந்தக் குரலில் அவரே இசைத்தது போல, ஒப்பற்ற இசையை மிக எளிய மக்களுக்கு பல பத்தாண்டுகள் வழங்கிக் கொண்டே இருக்கும் ராஜாவின் இசை கொண்டாட்டம் நீடித்துக் கொண்டே இருக்கட்டும்.
ஜூன் 2: இளையராஜா பிறந்த நாள்
கட்டுரையாளர் தொடர்பு எண் : 94452 59691
நன்றி: புதிய ஆசிரியன் (ஜூன் 2019)