tamilnadu

img

அவமதிப்பு வைரமுத்துவுக்கு அல்ல: கி.வீரமணிஅவமதிப்பு வைரமுத்து

சென்னை, ஜன.1- சென்னை அருகே எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் கவிப்பேரரசு  வைரமுத்துக்கு வழங்கப்படவிருந்த டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்  சிங் வருகை ரத்து செய்யப்பட்டது. விழாவும் நிறுத்தப்பட்டது.  இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில், இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதன் பின்னணி யில் பாஜக, சங் பரிவார்கள் இருந்தன என்பது உறுதி செய்யப்பட்ட செய்தி. இதனால் கவிப்பேரரசுக்கு அவமதிப்பா என்றால், நிச்சயமாக இல்லை. அவர் எல்லா புகழின் உச்சத்தையும் எட்டியவர். அவருக்கு டாக்டர்  பட்டம் அளிப்பதன்மூலம் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்துக்குத்தான் பெருமை. அவர், இதற்குமுன் மூன்று பல்கலைக் கழகங்களில் முதுமுனை வர் பட்டம் பெற்றுள்ளார். 

நிகழ்ச்சி ரத்து செய்ததில் ஏற்பட்டுள்ள பொது ஒழுக்கக்குறைவு தான்  கவனிக்கத்தக்கது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர் வரவில்லை  என்றாலும், ஒட்டுமொத்த நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கத்தான் செய்கிறது. அப்படி நடத்தப்பட்ட  விழாவில் கவிப்பேரரசுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுதான் முறையானதாகவும், சரியானதாகவும் இருந் திருக்க  முடியும். அதைத் தவிர்த்தது - நிறுத்தியது ஏன்? ஏன்?? என்று கேள்வி  எழுப்பியிருக்கிறார்.

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத சங் பரிவார்களின் செயல் பாடுகள் கோழைத்தனமானவை, நாகரிகமற்றவை, அவர்களின் தரம் இதுதான் என்பதை நிரூபிக்கக் கூடியவை இவை என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டன என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ‘ஆண்டாள்’ என்பதே பொய்யான கதைப் பாத்திரம் என்று அவாளின் ஆச்சாரியார் ராஜாஜியே ஒப்புக்கொண்ட பிறகு, ‘இதுகள்’ துள்ளிக் குதிப்பதுதான் பரிதாபத்திற்குரியது. கவிப்பேரரசு  ஒரு தனி மனிதரல்ல, அவருக்குப் பின்னால் இயக்கங்கள் உறுதியாக, அரணாக இருக்கின்றன என்றும் கி. வீரமணி தெரிவித்திருக்கிறார்.