வங்கிகளில் வேளாண் அல்லாத தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோருக்கு ஆபரண தங்கத்தின் 75% மதிப்புக்கு பதிலாக 90% வரை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிவரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான கடன் வட்டி வீதம், எந்த மாற்றமும் இல்லாமல் 4% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் செலாவணி கொள்கைக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கினார்.
வேளாண் அல்லாத தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அல்லது நகைகள் மீதான அடமான கடன்களுக்கு வங்கிகள் அளிக்கும் ஒப்புதல், அந்த நகை அல்லது ஆபரணத்தின் மதிப்பில் 75% அளவை தாண்டக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு கூறுகிறது. அந்த உச்சவரம்பை , கொரோனா பரவல் தாக்கத்தை கருத்தில் கொண்டு வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை 90% சதவீத அளவு ஆபரண மதிப்பு வரை கடன் வழங்கலாம் என்ற சலுகையை ரிசர்வ் வங்கி செலாவணி கொள்கைக்குழு வழங்கலாம் என கூறியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து தனி நபர்கள், அலுவலகங்கள் பெற்ற கடன் தவணையை செலுத்தாமல் இருக்க, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிவரை சலுகை வழங்கி ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருந்தது. அந்த காலக்கெடு இந்த மாத இறுதியில் முடிவுக்கு வருவதால், அது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடன் தவணை காலநீட்டிப்பு தொடர்பாக எந்த அறிவிப்பையும் சக்திகாந்த தாஸ் வெளியிடாதது கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருதப்படுகிறது.