வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை,ஆக.12- அனைத்து ரேசன் பொருட்களையும் ஆறு மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலையின்றி, வருமானமின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் இந்த நடவடிக்கை சிறிதளவு நிவாரணமாக இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது மக்களை மீண்டும் மீண்டும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.
ஆகையால், ரேசன் கடையில் அரிசியோடு சேர்த்து பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதங்களுக்கு விலையில்லாமல் கொடுக்க வேண்டும். இன்றுவரை அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசியை உடனடியாக வழங்க வேண்டும். கொண்டை கடலை தமிழகத்தில் வழங்கப்படவில்லை. இதையும் ஏப்ரல் மாதத்திலிருந்து சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.