வாணியம்பாடி, மே 13- வாணியம்பாடியில் வண்டிக்கடைகளை கவிழ்த்து விட்ட ஆணையருக்கு கண்டனங்கள் எழுந்த நிலை யில் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார் ஆணையர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொழில்கள் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுபடியாகாது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பி விட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு சென்ற நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டி களில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும், பழ தட்டு களை கவிழ்த்தும் மிருகத்தனமாக நடந்து கொண்டார். நிலைமையை எடுத்து சொல்லி அவர்களை கடைகளை மூட சொல்லாமல் நகராட்சி ஆணையர் ஒரு ரவுடி போல செயல்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து வாணியம்பாடியில் செய்தி யாளர்களை சந்தித்த ஆணையர், “கோயம்பேடு நிலைமை வாணியம்பாடியில் ஏற்பட்டுவிட கூடாது என்று எண்ணி தான் அவ்வாறு செய்தேன் என்றும் அது போன்று நடந்து கொண்ட செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து இழப்பீட்டையும் வழங்கினார்.