திருச்சி, ஆக.24- மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவிலேயே முதல் மாநாட்டை திருச்சியில் தமுஎகச தான் நடத்தியது. இதில் கலந்து கொண்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆற்றிய உரையின் சுருக்கம்: புதிய வரைவு கல்வி கொள்கைக்கு பல எதிர்வினைகள் தோன்றியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திமுக ஒரு அறிக்கையை முன்வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு எதிர்வினையை முன்வைத்துள்ளது. த.மு.எ.க.சங்கமும் எதிர்வினை ஆற்றியுள்ளது. இந்த அறிக்கைகளை வாசித்துவிட்டுதான் இங்கு வந்துள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இந்த கல்வி வரைவு கொள்கை சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. உயர்கல்வி ஆராய்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. இதுபோன்ற சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் பல கவலைகளையும் தோற்றுவித்துள்ளது. புதிய கல்வி வரைவு கொள்கையில் இதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட கல்வி ஆணையங்களின் பரிந்துரைகள் குறித்த எவ்வித ஆய்வும் செய்யப்படவில்லை. “இந்தியாவின் எதிர்காலம் அதன் வகுப்பறைகளில்தான் உள்ளது” என்று கூறியது கோத்தாரி ஆணையம். நீங்கள் கல்வியை 10+2+3 அல்லது 5+3+3+4 என எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கலாம். ஆனால் போதுமான நிதியை கல்விக்கு முதலீடு செய்தீர்களா? பள்ளிகளில் உள்கட்டமைப்பும் பரிசோதனை கூடங்களும் பொருத்தமான முறையில் ஏற்படுத்தப்பட்டனவா? தரமான ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டதா? இவையெல்லாம்தான் முக்கிய கேள்விகள்.
இந்தியாவின் சமூக படிநிலைகள் ஏராளம். சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பல படிநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அசாதாரணமான முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன. மக்களின் ஒரு பகுதியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். கொடூரமான பின்விளைவுகளை இது உருவாக்கியுள்ளது. எந்த ஒரு கல்வி வரைவு திட்டமும் இவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். எனினும் சமூக நீதி குறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் கல்வி வரைவு அறிக்கை கவலை கொள்ளவில்லை எனும் விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.
எது உண்மையான கல்வி?
கல்வியின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? மகாத்மா காந்தியை பொறுத்தவரை கல்வி என்பது வேலை வாய்ப்புக்காக தயார்ப்படுத்துவது மட்டுமாக இருக்கக்கூடாது; அது முக்கியம்தான்! ஆனால் அதைவிட முக்கியமானது கல்வி என்பது ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் மற்றவர்களை அவன் எப்படி வாழவிட வேண்டும் என்பதையும் இயற்கைக்கும் அவனுக்கும் உள்ள உறவையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுவே கல்வியின் உண்மையான நோக்கம் என்று மகாத்மா காந்தி கூறினார்.
அதே போல டாக்டர் அம்பேத்கர் கூறியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நாம் உருவாக்கியுள்ள இந்த அரசியல் சட்டம் அரசியல் சமத்துவத்தை தந்துள்ளது. ஆனால் பொருளாதார சமத்துவமும் சமூக சமத்துவமும் இன்னும் எட்டப்படவில்லை. அவை இல்லாமல் அரசியல் சமத்துவம் கூட நிலைத்து நிற்காது” என எச்சரித்தார். இத்தகைய சூழலில்தான் இன்று தேசம் உள்ளது. நவீன தாராளமய கொள்கைகள் சமூகத்தில் அளவிடமுடியாத அசமத்துவத்தை உருவாக்கியுள்ளன. ‘நான்’, ‘எனது’ எனும் தன் நலன் மட்டுமே கவனிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. ‘பேராசை நல்லதுதான்’ எனும் கருத்து உருவாகியுள்ளது. இந்த சூழலில் கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் எனும் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. நமது அரசியல் சட்டம் கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த கல்வி வரைவு அறிக்கை அதற்கு முரண்பாடாக உள்ளது என்பது வேதனையான ஒன்று. நமது பாரம்பரியம் என்பதே கேள்வி கேட்பதுதான். எனினும் இன்றைய நிலைமை என்ன? கேள்விகள் கேட்பதற்கு அஞ்சும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவர்கள் தாக்குதலுக்கு அல்லது அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆகவே நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்- பயமின்றி கேள்வி எழுப்புங்கள். இந்த கல்வி வரைவு கொள்கை குறித்து தைரியமாக உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தயக்கமின்றி உங்கள் எதிர்வினையை ஆற்றுங்கள். இந்த தேசத்திற்கு அது மிகவும் தேவை!