tamilnadu

img

இதயங்களில் வாழ்கிறார் தோழர் தே.இலட்சுமணன்...

“சமூக பிரச்சனைகளை மார்க்சிய சித்தாந்தத்தின் பார்வையிலேயே அணுகிய அவர், அரை நூற்றாண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். எளிமையாகவும், இனிமையாகவும் பழகக் கூடியவர். வயது வித்தியாசம் பார்த்து பழகியதில்லை. அன்பு காட்டுவதிலும், உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே”.

தோழர்களை ஊழியர்களாக பயிற்றுவிப்பதில் பெரும் பகுதியை செலவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தே.லட்சுமணன். அந்த அற்புத மனிதரை அனைவரும் தோழர் ‘டி.எல்’ என்றே அழைப்பது வழக்கம். 
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கொடிய வைரஸான கோவிட்-19 தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலைவர்கள் சிலரை இழந்துள்ளது. அதில் ஒருவர்தான் தோழர் டி.எல்.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இரவு தோழர் லட்சுமணனின் உயிரை பறித்துக் கொண்டது கொரோனா வைரஸ். அவரது நினைவைப் போற்றும் ‘தீக்கதிர்’  சிறப்பிதழுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

84 வயதிலும் சுறுசுறுப்பாக ஒரு இளைஞனைப் போன்று ஓடி, ஆடி வேலை செய்யக்கூடிய மகத்தான தலைவர். அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார் என்பதை இன்னமும்கூட நம்பவே முடியவில்லை.

கேடயம்...
1960 ஆம் ஆண்டு கால்நடைத்துறை பணியில் சேர்ந்த தோழர் லட்சுமணன், 1969ல் கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றினார்.அன்றைக்கிருந்த என்ஜிஓ சங்கத்தின் ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் எம்.ஆர். அப்பன்  போன்ற தலைவர்க ளுடன் இணைந்து கடுமையாகப் போராடி ‘தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் டி.எல்.அன்றைக்கு சைதாப்பேட்டை பெத்தல் லாட்ஜில் செயல்பட்டுவந்த கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ‘அரசு ஊழியர்’ ஏடு கொண்டுவரப்பட்டது. அதில் தோழர் டி‌. லட்சுமணனுக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழ்நாடு முழுவதுமுள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்றைக்கும் ‘கேடயமாக’ இருக்கிறது என்றால் அதில் தோழர் லட்சுமணனின் பங்கு மகத்தானது. சங்கத்தை கட்டுவதற்கு மாநிலம் முழுமைக்கும் சென்று இரவு - பகலாக உழைத்தார். 

கொள்கை வீரர்...
அந்தக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டார். அரசுப் பணியை ராஜினாமா செய்ய வேண்டும், கட்சியின் முழுநேர ஊழியராக வேண்டும் என்று கட்சி தலைமை கட்டளையிட்டது. கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் கொண்ட கொள்கைக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு கட்சிக்கு முழுநேர ஊழியராக வந்தவர்தான் தோழர் லட்சுமணன்.அன்று முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்தார். ஒன்றுபட்ட சென்னை-செங்கல்பட்டு மாவட்டம் 1981ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டமாக உருவானபோது மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று கொண்டு குடும்பத்துடன் செங்கல்பட்டுக்கு குடிபெயர்ந்தார்.

1982 ஆம் ஆண்டு கடலூரில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் நானும் தோழர் லட்சுமணனும் முதன்முறையாக மாநிலக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டோம்.கட்சியின் மாநில செயற்குழுவில் கட்சி எடுக்கும் முடிவுகளை உருவாக்குவதில் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக செலுத்தி இருக்கிறார். கட்சிக்குள் நடக்கும் விவாதங்களில் மிக ஆக்கப்பூர்வமாக பங்கேற்பார். ஆலோசனைகளை வழங்குவார்.அவ்வப்போது முன்னுக்கு வரும் பிரச்சனைகள் குறித்து கட்சிக்குள் நடக்கும் விவாதங்களில் தனக்குள்ள கருத்துகளை பகிரங்கமாக எந்தத் தயக்கமும் இன்றி முன்வைப்பார். மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கடுமையாக எதிர்ப்பார்.அதேசமயம், கட்சி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்பதை ஒப்புக் கொள்வார். அதை அமல்படுத்துவதில் எந்த சுணக்கமும் காட்டியதில்லை. இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.கட்சிக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை  பொது வெளியில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதம் என்ற பெயரில் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், கட்சிக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை தோழர் லட்சுமணன் எந்த சூழ்நிலையிலும் வெளியில் பேசியதும் விமர்சனம் செய்ததும் கிடையாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.இரவில் எத்தனை மணிக்கு வீட்டுக்கு சென்றாலும் அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு மின்சார ரயில் மூலம் சென்னை மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டவர்.

பன்முகத் தன்மை...
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சிப் பணிகளை செய்ததோடு கட்சியின் வெகுஜன அமைப்புகளை கட்டுவதில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். அரசியல் வகுப்புகள் மூலம் வாசிக்கும் பழக்கத்தை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தியவர். தீவிர வாசிப்பாளரான அவர், எப்போதும் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டவர். ரயில், பேருந்து பயணங்களிலும் புத்தக வாசிப்பை நிறுத்தியதே கிடையாது.எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் , நண்பர்கள் என்று அவரது வட்டம் மிகவும் பெரியது.

எதிலும் பொருந்துபவர்
கலை-இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோழர் லட்சுமணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தார்.சமூகத்தில் பல நேரங்களில் ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை நேசித்ததோடு மட்டுமின்றி சங்கம் அமைத்து பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி அமைப்பாக்கினார். சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை கொண்டதால் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவை உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றினார்.‘தீக்கதிர்’ நாளேட்டின் பொறுப்பாளராகவும் திறம்பட பணியாற்றினார். மார்க்சிஸ்ட் தத்துவ இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார்.

பல்கலைக்கழகம்...
அனைத்து தோழர்களிடமும் அன்பாக பழகி அரவணைத்துச் செல்லக் கூடிய சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர்.தீக்கதிர், செம்மலர் உள்ளிட்ட வர்க்க வெகுஜன மாதப் பத்திரிகைகளில் தத்துவார்த்த கட்டுரைகளை ஏராளமாக எழுதி இருக்கிறார்.
தமிழ்நாடு முழுமைக்கும் சென்று மார்க்சியம், கட்சி  திட்டம் போன்றவற்றை மாணவர்கள், இளம் தோழர்களுக்கு எளிய நடையில் பயிற்றுவிப்பதில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.மார்க்சியத் தத்துவம், பொருளாதாரம் குறித்து மிக, மிக எளிய முறையில் சாதாரண ஊழியர்களும், தொழிலாளி, விவசாய வர்க்கத்தினரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு வகுப்புகள் எடுப்பதில் தனித்துவம் பெற்றவர்.இந்தியாவின் தத்துவ இயல், ஆரம்பகால பொருள்முதல்வாத தத்துவ புத்தகங்களை அதிகமாகப் படித்து தோழர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்வதற்கு வசதியாக ஐந்து புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

எளிய தத்துவவாதி
அதில் குறிப்பாக ‘பகுத்தறிவாளர் புத்தரின் கொள்கைகள், கோட்பாடுகள், அணுகுமுறைகளை மிக விரிவாக ஆய்வு செய்து “பகுத்தறிவாளர் புத்தர்” என்ற நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பிராமண,வேத மதங்களுக்கு மாறான கொள்கையை புத்தர் எப்படி கொண்டு வந்தார்.சாதிய வேறுபாடுகள், வேதங்கள், மறு பிறப்பு போன்றவற்றை புத்தர் எதிர்த்தது ஏன்? என்பதையும் புத்தரது பல்வேறு கொள்கைகளையும் மிக ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து கொண்டு வந்திருக்கும் அந்தப் புத்தகத்தை படித்தாலே புத்தரை முழுமையாக மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும்.தத்துவம், பொருளாதாரம், அரசியல், வரலாற்றை ஆசிரியரும் மாணவனும் கேள்வி - பதில் நடையில் கலந்துரையாடல் செய்யும் வகையில் கொண்டு வந்த “அவனின்றி அனைத்தும் இயங்குகின்றன” என்ற புத்தகம் தோழர் லட்சுமணனின் மற்றுமொரு அருமையான படைப்பாகும். அவர் எழுதிய புத்தகங்களை படித்தாலே அவரது ஆழமான தத்துவ இயலின் சிந்தனை, ஆழமான புரிதலை நம்மால் உட்கொள்ள முடியும்.

உயிர் மூச்சாய்...
தனது வாழ்நாள் முழுதும் கட்சிப் பணியை முழு மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர். வயது மூப்பு காரணமாக கட்சியில் பொறுப்புகளில் இல்லை என்றாலும் தினசரி கட்சி அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கொஞ்சமும் மன, உடல் சோர்வின்றி கட்சிப் பணிகளை மேற்கொண்டு   “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது” என்று வழிகாட்டிக் கொண்டு வந்தார்.

சாதித்தவர்...
அவரது குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தோழர் லட்சுமணின் தம்பி கிருஷ்ணமூர்த்தி காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த போதிலும் தோழரை போன்று நண்பர்களாகவே பல மணி நேரம் விவாதிப்பார். அந்த அளவுக்கு பாசமும், நேசமும் கொண்டவர்கள்.சாதி, மதம் இல்லை என்று மேடைதோறும் பேசிடலாம். அதை குடும்பத்தில் அமல்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், தனது குடும்பத்தில் சாதி மற்றும் மத மறுப்புத் திருமணங்களை செய்து வைத்து சாதித்துக் காட்டியவர் தோழர் லட்சுமணன். அதனால்தான் அவரது குடும்பம் மற்றவர்களுக்கு இலக்கணமாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து காட்டி வருகிறது.

நேயத்தை பழக்கியவர்
தோழர் லட்சுமணனின் துணைவியார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தாலும், மகன்கள் ஆனந்த், சரவணன் மற்றும் மருமகள்கள் இருவரும் ஒரு தந்தையை மகள்கள் எப்படி பராமரித்து பாதுகாப்பார்களோ அதைப்போன்று பராமரித்து பாதுகாத்து வந்தனர். அவரது மறைவு அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல கட்சிக்கும் பேரிழப்பாகும். தோழர் லட்சுமணன், அரசு ஊழியர் சங்கம் துவக்கிய காலத்திலிருந்து அரசு ஊழியர்களின் உரிமைக்காக போராடி குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் லட்சுமணன் கட்சியை வழிநடத்துதல், இயக்குதல் என பல்வேறு பொறுப்புகளையும் நிறைவாக நிறைவேற்றியிருக்கிறார். கட்சி தீர்மானித்த பணிகளை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்.

ஒரு நண்பராய் பழகி மார்க்சியத் தத்துவங்களை எளிதில் புரிய வைத்து சமூக மாற்றத்திற்கான பணியில் இளம் தோழர்கள் முழு உத்வேகத்துடன் செயல்பட ‘கலங்கரை விளக்காக’ வழிகாட்டிய அவரது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

தொகுப்பு : சி.ஸ்ரீராமுலு