செங்கல்பட்டு, ஜூலை 28- செங்கல்பட்டு நீதிமன்றங்களில் பணியாற்றும் 23 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மாவட்ட நீதிமன்றம் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற, மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட 12 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு கள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்க ளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். தினமும் அரசு பேருந்து மூலம் நீதிமன்றம் வருகை தருகின்றனர். இந்நிலையில் அண்மையில் ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில், 23 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நீதிமன்றங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படவில்லை என்று மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணி தொய்வின்றி நடப்பதாக நீதிமன்ற ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.