தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம்
சென்னை, மே 27 - அனைத்துக்கடன்களையும் ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி மே 27 புதனன்று இந்திய நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறைகூவலை ஏற்று தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் மையங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் - 2020-ஐ திரும்பப்பெற வேண்டும். ஊரடங்கு காலத்தில் அழிந்த நெல், மலர், காய், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும்.கொரோனா நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு கோரிய தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று கொரோனா கால ஊரடங்கு நிவாரணமாக சிறுகுறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பிரதம மந்திரி விவசாயிகள் உதவி திட்டத்தில் வழங்கும் தொகையை ரூ.18 ஆயிரமாக மாற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயத்தொழிலாளர் குடும்பங்களுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக 7ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
தென்சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டதுணைத்தலைவர் டி.கே.எஸ்.மோகன் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் பி.வீரன், செயலாளர், எம்.சந்திரன், பொருளாளர் கே.அரும்புராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சண்முகம், மூத்த தொழிற்சங்கத்தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.இதனையடுத்து தாம்பரம் கோட்டாட்சியர் சி.ராஜ்குமாரை சந்தித்து தலைவர்கள் மனு அளித்தனர்.