நாகர்கோவில், ஏப்.10- கொரோனா பீதியில் அனைவரும் தனிநபர் இடைவெளி கருதி வீடுகளில் முடங்கியிருக்கையில் இவை எதற்கும் சம்மந்தமில்லாதவர்கள் போல் குறுகலான குப்பை வண்டியில் இடைவெளியின்றி தூய்மைப்பணியாளர்களை அழைத்துச் செல்லும் கொடுமைக்கு தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சியில் சுமார் 30 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். குறைவான ஊதியம், அதிக பணி நேரம், போதுமான பாதுகாப்பு கருவிகள் இல்லை என்று கூறி கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஒருநாள் நடத்திய போராட்டத்தைக்கூட அனுமதிக்காமல் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தை தூண்டியதாக கூறி இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவேளையில் நகரைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. நகராட்சிக்கு குப்பை அள்ளும் சிறிய லோடு ஆட்டோவில் அவர்கள் அதிகாலையில் அழைத்து வரப்படுகிறார்கள். அதுபோல் மாலையில் கொண்டு விடப்படுகிறார்கள். இந்த பயணத்தின்போது போதிய தனிமனித இடைவெளியை பின்பற்ற முடிவதில்லை என்று பீதியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் தேனீர் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருப்பதால் காலையில் வெறும் வயிற்றுடன் பணியைத் தொடங்கும் நிலை . ஊரடங்கினால் மக்கள் காலையில் எழுவதற்கு தாமதமாவதால் வீடுகளில் காத்திருந்து குப்பைகளை வாங்கவேண்டிய நிலை உள்ளது.
ஆனால் காலை 10 மணிக்கு குப்பை வாகனம் வந்து விடுவதால் அதற்குள் குப்பைகளை சேகரித்தாக வேண்டும். அம்மா உணவகத்தில் கிடைக்கும் மதிய உணவு மட்டுமே அவர்களுக்கு ஆறுதல். தற்போது வைரஸ் நோய் பரவி வரும் சூழ்நிலையில் தங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது .பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவிப்பதும் பாத பூஜை செய்வதும் மக்களால் நடத்தப்பட்டு வருவது பாராட்டுக்கு உரியது என்றாலும் இவர்களைப் போன்ற ஒப்பந்த பணியாளர்களின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. (ந.நி)