கொரோனோ ஊரடங்கின் விளைவாக கேரளத்தில் 80,000 லிட்டர் பால் சாக்கடையில் கொட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கொரோனோ பரவுவதைத் தடுக்க கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கின் விளைவாக கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 80,000 லிட்டர் பால் சாக்கடையில் கொட்டப்பட்டுள்ளது.
கேரளத்தின் வடபகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சேகரிக்கப்படும் பால் அங்குள்ள கூட்டுறவு பால் சங்கங்களிடம் ஒப்படைக்கப்படும். அது பின்னர் அங்கிருந்து கேரள அரசாங்கத்தின் "மில்மா" பால் வாரியத்திடம் அளிக்கப்படும். உள்ளூர் தேவைக்கு அதிகமாக உள்ள பால் தமிழகத்தில் உள்ள பால் பவுடர் தயாரிப்பு ஆலைகளுக்கு மில்மா மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
தற்போது கொரோனா கேரளத்தில் டீக்கடைகள் எதுவும் இயங்குவதில்லை. கேரள வாகனங்களை தமிழகத்தின் உள்ளே அனுமதிப்பது இல்லை.
இதன்காரணமாக பாலக்காடு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட சுமார் 80,000 லிட்டர் பாலை விவசாயிகள் அங்கிருந்த சாக்கடையில் கொட்டி அழித்தனர்.
பால் உற்பத்தியாளர்களின் பிரச்சனைக்கு மாற்று வழி காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேரள மாநில விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்