புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய வட்டமேசை விவாத நிகழ்ச்சியின் போது மூத்த பத்திரிகையாளரும், ஆர்.கே.ராதாகிருண்ன் அவர்களை பாஜக கும்பல் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் கரூரில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்று பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் எலக்ட்றல் பாண்டு மூலம் பாஜக 1100 கோடி வசூல் செய்துள்ளது.. அது யார் யார் பணம் என்ற கணக்கு ஏன் பாஜக கொடுக்கவில்லை.. பாஜக ஊழல் செய்யவில்லை என்றால், அந்த பணம் எங்கே இருந்து யாரால் வந்தது என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்க முடியாத பாஜக கும்பல் வழக்கம் போல், அராஜகத்தில் ஈடுபட்டதோடு, பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களையும் தாக்க முற்பட்டது. தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட பாஜக கும்பலை காவல்துறையினர் வழக்கம் போல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.
இது முதல் முறையல்ல. இதே புதிய தலைமுறை தொலைக்காட்சி இதே வட்டமேசை விவாதம் கோவையில் நடத்திய போது, இயக்குநர் அமீர் இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலையின் போது பாஜக கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றிய வன்முறையை குறிப்பிட்டார். அப்போதும் இதே வேலையைத்தான் செய்தது. அமீர் அவர்களை தாக்க முயன்றனர். அப்போது மேடையிலிருந்த சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொங்கு இளைஞர் பேரவையின் உ.தனியரசு ஆகியோர் தலையிட்டு தடுத்து நிறுத்தியதோடு, அந்த கும்பலை கடுமையாக கண்டித்தனர். பின்னர் அந்தகும்பலின் பிடியிலிருந்து அமீர் அவர்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த முறையும் காவிக்கும்பல் அதே முறையைத்தான் பின்பற்றி அராஜகத்தை நிகழ்த்தியிருக்கிறது. கரூரில் இடைத்தேர்தல்கள் திருப்பம் தருமா என்ற தலைப்பில் வட்டமேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இதில் திமுக - சபாபதி மோகன், அதிமுக - செம்மலை , காங் - ஜோதிமணி , பாஜக - சீனிவாசன், அமமுக புகழேந்தி, நாம்தமிழர் கல்யாண சுந்தரம், மக்கள் நீதி மய்யம் சினேகன் இவர்களோடு மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். நெறியாளர் கார்த்திகை செல்வன் இதை ஒருங்கிணைத்து நடத்தினார்.
அப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதார்த்தமாக இந்த விவாதத்தை அணுகிய நேரத்தில்.., பாஜகவும், நாம் தமிழரும் கட்சியினர் தங்கள் அமைப்பின் சார்பில் முன்கூட்டியே திட்டமிட்டு நபர்களை வரவழைத்திருந்தனர். அவர்கள் பேசினாலே எழுந்து கை தட்டி விசில் அடிக்க பக்கா செட்-அப்- ம் இருந்தது.
பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் பேசும் பொழுது.., எலக்ட்றல் பாண்ட் மூலம் பாஜக 1100 கோடி வசூல் செய்துள்ளது.. அது யார் யார் பணம் என்ற கணக்கு ஏன் பாஜக கொடுக்கவில்லை.. பாஜக ஊழல் செய்யவில்லை என்றால், அந்த பணம் எங்கே இருந்து யாரால் வந்தது என்ற கேள்வியை வைத்தார்.
இதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் அடுத்த நொடியே சபையில் அமர்ந்திருந்த பாஜக கூட்டம் எழுந்து கேவலமாக ராதாகிருஷ்ணன் அவர்களை வசைபாடியது. தொடர்ந்து அவரை தாக்கும் எண்ணத்தோடு மேடையை நோக்கி முன்னேறினர். மிகப்பெரிய தள்ளுமுள்ளுக்கு பின்னர் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். வழக்கம் போல் காவல்துறையினர் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.
விழா முடிந்தும், பாஜக கும்பல் வெளியேறாமல், ராதாகிருஷ்ணன் வெளியே வரட்டும் என வாசல் முன்பு காத்திருந்தது. இவற்றை பார்த்த பார்வையாளர்கள் பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை, ஜனநாயகம் மீதெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. எப்போதும் வெறித்தனத்தோடு தெரிவது அநாகரீக அரசியல் என்று கூறிச்சென்றனர். ஒரு வழியாக பத்து மணிக்கு மேல் தான் அவரை பத்திரமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனுப்பி வைக்க முடிந்தது.. அதே போல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி கிளம்பும் பொழுதும் அவரை சூழ்ந்துகொண்டு பாரத் மாதா கி ஜே என காட்டுக்கூச்சல் போட்டு அவரை நகரவிடாமல் செய்தார்கள்.
இதுகுறித்து குமரன் கருப்பையா என்பவர் தனது முகநூலில் ''பாஜக என்ற கட்சியை ஏன் பிடிக்கவில்லை தெரியுமா.., அவர்களுக்கு கேள்வி கேட்டால் பிடிக்காது, காரணம் பதில் தெரியாது.., அதனாலேயே கேள்வி கேட்போரை அடிக்கவும் தயங்க மாட்டார்கள்.. கேள்வி கேட்டு கட்டுரைகள் எழுதிய கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போன்ற பத்திரிக்கையாளர்களை ஏற்கனவே கொன்றே விட்டார்கள்.
பாஜக எனும் கட்சி இந்த நாட்டுக்கு கேடு.. என்று பதிவிட்டுள்ளார்.