கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து
உலகத்தின் இயக்கத்தை உறைய வைத்திருக்கும் கொரோனா வாழ்வியலுக்கும் அறிவியலுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அடர்ந்த அறைகூவலாகும். அதை எதிர்கொள்ளவும் எதிர்த்து வெல்லவும் கூடிய அறிவாற்றலும் செயலாற்றலும் வேறெந்த உயிரிகளுக்கும் உண்டோ இல்லையோ மனித குலத்துக்கு உண்டு. இயற்கை இடர்களைத் தாண்டித் தாண்டித்தான் மனித இனம் கோள்களை வெற்றி பெறும் குறிக்கோள்களை எட்டியிருக்கிறது. இந்த இடரையும் வெற்றி கொள்வோம். அதன் முன்முயற்சிகளுள் ஒன்றாக ‘அன்னவாசல்’ என்ற திட்டத்தின் மூலம் ஆயிரமாயிரம் பசித்த வயிறுகளை அன்னத்தால் நிரப்பும் அரும்பணி மதுரையில் தொடர்ந்து நடைபெறுவது போற்றத்தக்க பொதுத்தொண்டாகும். அதனை முன்னெடுத்துத் திறம்பட நிகழ்த்தும் செயல் வீரர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நம் பாராட்டுக்குரியவர். அள்ளிக்கொடுக்கும் உள்ளங்களையும், தொண்டு செய்து கொண்டு சேர்க்கும் வாலிப ரத்தினங்களையும் வாழ்த்துகிறேன். “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்” மகாகவி இட்டது கட்டளை; இது – கருமம்.
தவத்திரு பொன்னம்பல அடிகளார் வாழ்த்துரை
யாராயினும், எத்தேசத்தவராயினும், எந்நாட்டவராயினும் அவர்தம் பசித் தீயை அணைத்திடுக என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான் குறிப்பிட்டான். கொரோனா எனும் கொடுந்தொற்று உலகை ஆட்டிப்படைக்கும் பேரிடர் காலத்தில் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், இரந்துண்போர், மனநலம் குன்றியோர் அனைவருக்கும் உணவளிக்கும் அந்த செயலை நமது மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு சு.வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் “மதுரை அன்னவாசல் திட்டம்” என்ற பெயரில் ஆதரவற்ற அனைவருக்கும் நேரில் சென்று உணவளித்துள்ளது தொண்டுகளின் அரிய தொண்டாக மக்களின் வயிற்றுப் பசியை அணைக்கும் தொண்டாக அமைந்துள்ளது. இத்தொண்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்தி நன்றி கூற வார்த்தைகள் இல்லை. மனிதகுலத்தின் உயிருக்கும், பொருளாதாரத்திற்கும் சவால் விடும் கொரோனா என்ற பேரிடரில் ஆதரவற்றோர்களுக்கு உணவளிப்பதன் மூலம் துயர்நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டி வாழ்த்துக்கூறுகின்றோம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு.வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் செயல்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுகின்றோம். மனிதநேயப் பணிகள் தொடரட்டும்.
“கீழவாசல், மேலவாசல், தெற்குவாசல், வடக்குவாசல் கிடக்கட்டும் இந்த அன்னவாசல் நடக்கட்டும்” ஆ.பாலகிருஷ்ணன், ஐஏஎஸ் ஒடிசா மாநில அரசின் சிறப்பு ஆலோசகர்
அன்னவாசல் திட்டத்தில் தன்னை ஒரு தொண்டராக இணைத்துக்கொண்டுள்ளார் மதுரை கல்லூரி மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான வேல்தேவா. அவர் கூறுகையில், முதல் நாள் பால்பண்ணை அருகில் உள்ள நித்யா மெஸ் சார்பில் 70 பேருக்கு உணவு வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்டு புதூர் அண்ணாநகர் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள், மனநலம் குன்றியவர்கள், கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. பயனாளிகள் தேர்வு சற்று சிரமமாக இருந்தது. அந்தத் தருணத்தில் கரும்பாளையம் சீட் டியூசன் சென்டரைச் சேர்ந்த விக்கி உதவி செய்ய முன்வந்தார். நாங்கள் அவர் கூறியபடி சென்று பயனாளிகளைச் சந்தித்து உணவு வழங்கியபோது தங்களுக்கு உதவி செய்ய, அரவணைத்துக் கொள்ளவும் சிலர் இருக்கிறார்கள் என்று கூறி கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.
அப்போது நாங்கள் அவர்களிடம், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உங்களுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறினோம் அவர்கள் வழிந்த கண்ணீரைத் துடைத்து புன்னகைத்தனர். தினம்தோறும் நாங்கள் அவர்களுக்கு உணவளிக்கும் போது அவர்களின் ஏக்கம் எங்களுக்கு கடினமாக தெரிகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன், சதீஷ் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அசாருதீன், சரவணன், பிரபு, கணேசன், ராஜேந்திரன், சீட் டியூஷன் சென்டர் விக்கி, சிவா, திருப்பதி ஆகியோருடன் இந்தப் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது பத்து திருநங்கைகள் உட்பட 175 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். மூன்று தலைமுறைகளை சந்தித்த 102 வயது மூதாட்டி எங்களை தினமும் ஆசீர்வாதம் செய்கிறார்கள் என்றார். வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் தலித் மக்கள் அடிப்படை வசதிகளின்றி அகதிகள் போல் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கும் உணவு வழங்கினோம். எங்களால் மக்களுக்கு செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் தருணத்தில் இரவு-பகல் பாராமல் கௌரி உணவகத்திற்கும், நன்கொடை அளித்து ஊக்கமளித்து வருபவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
சீத்தாராம் யெச்சூரி வாழ்த்து
மாமதுரையின் அன்னவாசல் திட்டத்தின் மூலமாக கொரோனா நோய் தொற்று மற்றும் சமூக ஊரடங்கு எனும் கொடிய காலத்தில் பேருதவியாக ஒன்றரை லட்சம் வேளை உணவு வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த திட்டத்திற்கு முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்த தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. மற்றும் உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்கள், சமையல் கலைஞர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்முயற்சியால் துவக்கப்பட்ட மாமதுரையின் அன்னவாசல் திட்டத்தின்கீழ் இதுவரை 1லட்சத்து50ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு விளிம்புநிலை மக்கள் பசியாறியுள்ளனர் என்கிற செய்தி உண்மையில் மிகுந்த பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும். இந்தத் திட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு பண உதவி, பொருளுதவி செய்த கொடையாளர்கள், சமையல் பணியிலே தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்ட சமையல் கலைஞர்கள் ஒவ்வொரு நாளும் சலிப்பின்றி பசித்த வயிறுகளை தேடித் தேடி உணவளித்த தொண்டர்கள், தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள் -மாணவர்கள் மற்றும் இந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கம், வர்க்க - வெகுஜன அமைப்புகளின் தன்னலமற்ற ஊழியர்களின் உழைப்பே இந்தத் திட்டத்தை பெரும் வெற்றிபெறச் செய்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கட்சி