தமிழகத்தில் 10-ஆம் வகுப்பிற்கு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், திங்கட்கிழமை இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 11-ம் வகுப்பில் விரும்பும் பிரிவை எடுக்க முடியுமா என மாணவர்கள் இடையே குழப்பம் எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு ரத்து செய்தது. கல்வியாளர்கள் மேல்மட்ட குழு ஆலோசனையின்படி, 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகிதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவிகிதமும் இறுதித்தேர்வு மதிப்பெண்களாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், திங்கட்கிழமை இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு 11-ம் வகுப்பில் விரும்பும் பிரிவை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களும், மதிப்பெண்கள் எவ்வாறு வரப்போகிறதோ என குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம், பொதுத்தேர்வு நடைபெற்றிருந்தால், கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்து, விரும்பிய பிரிவுகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனவும் மாணவர்கள் கூறுகின்றனர்.