tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூலை 19

1919 -  இங்கிலாந்தின் லூட்டன் நகரின் உள்ளாட்சி அலுவலகம்(டவுன் ஹால்), முதல் உலகப்போரில் பங்கேற்றவர்களான முன்னாள் படைவீரர்களால் கொளுத்தப்பட்டு, முற்றிலுமாக அழிந்தது. அப்போது உலகப்போர் என்ற பெயர்கூட பெரிதும் பயன்பாட்டுக்கு வந்திருக்காமல், பெரும்போர் என்றழைக்கப்பட்ட, அதுவரை உலகம் கண்டிராத பேரழிவுகளை ஏற்படுத்திய போர் என்பதால், போரின் முடிவுக்குப்பின், பல நாடுகளும் அமைதி நாள்(பீஸ் டே) என்ற பெயரில் போரின் முடிவை, தங்கள் வசதிக்கேற்ற நாளில் கொண்டாடின.

அப்படி, இங்கிலாந்தில் லூட்டன் நகரிலும் கொண்டாடப்பட்ட அமைதி நாள் விழாவில்தான், முன்னாள் படைவீரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். உலகப்போரின்போது, ஏராளமான வீரர்களின் தேவை இருந்ததால், பல நாடுகளும், இளைஞர்களுக்கு ராணுவப் பணியைக் கட்டாயமாக்கியிருந்தன. அமைதிக்காலத்தில் அவ்வளவு பெரிய படை தேவையில்லை என்பதாலும், அவ்வளவு பேருக்கு ஊதியம் அளிக்க முடியாது என்பதாலும், இப்படி ஏராளமாகச் சேர்க்கப்பட்டிருந்த வீரர்கள்,  போர் முடிந்தபின், படைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு, போரினால் பொருளாதாரம் சீர்குலைந்திருந்ததால், வழக்கமாக ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறவர்களுக்கு வழங்குவதைப்போன்று, போதுமான அளவு நிதிப் பயன்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலமும் வழங்கப்படாததுடன், போரினால் தொழில்களும் சீரழிந்திருந்ததால், இவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. நல்ல வீடுகூட இல்லாமல் தவித்த இவர்களுக்கு, ரேஷனாக வழங்கப்பட்ட உணவுப்பொருட்களும் போதுமானவையாக இல்லை. போரில் வெல்லக் காரணமானவர்கள் எளிய வாழ்க்கைக்கே வழியின்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த அமைதி நாள் விழாக்கள், வழக்கம்போல ஆளும் வர்க்கத்தின் ஆடம்பரக் கொண்டாட்டங்களாக அமைந்திருந்தன.

லூட்டனில் நடைபெற்ற விழாவில்  ஆடம்பரமான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கான கட்டணம், முன்னாள் படைவீரர்கள் செலுத்த முடியாத அளவுக்கு மிக அதிகமாகவும் இருந்த நிலையில்தான், ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த அவர்கள் கோபமுற்று தாக்கத் தொடங்கினர். அமைதிநாள் கலவரம் என்றே அழைக்கப்படும் இது, ஜூலை 21வரை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தது. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவையும் கொள்ளையிடப்பட்டன. தான் உறுதியளித்திருந்தவற்றை அவர்களுக்குத் தராமல் தவறிய அரசு, கலவரத்தை ஒடுக்கியதுடன், போரின் வெற்றிக்குக் காரணமான அதே வீரர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கியது. 2019இல் இந்நிகழ்வின் நூறாண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

===அறிவுக்கடல்===