tamilnadu

இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள்

இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை கட்ட இந்தியா - அமெரிக்கா இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு நாட்டு அரசு தரப்பும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 


கடந்த 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட அமெரிக்க - இந்திய அணு ஒப்பந்தத்தை ஒட்டி அணு மின் நிலையங்களை இந்தியாவில் கட்டுவது குறித்து முதன் முதலில் 2016-ல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இந்திய அரசு பல ஆண்டுகளாக அணு உலைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க விவாதித்து வந்தது. ஆனால், இந்திய தரப்பில் இருந்த விதிமுறைகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக, அணு உலை அமைத்த பின்னர் நடக்கும் விபத்துக்கு அதைத் தயாரித்தவர்களுக்கு பொறுப்பு கிடையாது என்றும், அதை உபயோகிப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றிருக்கும் சர்வதேச விதிமுறைக்கு ஏற்றார் போல் இந்திய தரப்பு விதிமுறைகள் இல்லாதது, இந்த விவகாரத்தில் பின்னடைவாக இருந்தது எனப்படுகிறது. 


பிட்ஸ்பர்கை மையமாக வைத்து செயல்படும் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம், இந்தியாவில் அணு உலைகளை கட்டுவதற்கு பல ஆண்டுகள் முயன்று வந்தது நிலையில், விதிமுறையில் இருக்கும் அபாயம் காரணமாக அணு உலைகளை கட்ட இயலாமல் போனது. கடந்த 2017-ஆம் ஆண்டு வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் திவால் ஆனதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. 


இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்ட்ரியா தாம்ஸன் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இரு நாடுகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள் புதியதாக கட்டப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியா, தனது அணுசக்தி திறனை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியா - ரஷ்ய நாடுகள், 6 அணு உலைகளை கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



;