வேலை இழந்த தொழிலாளர்களின் நிலை பற்றியும் அவர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் குறித்தும் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருக்கிறோம்
ஆனால் வலதுசாரிகளும் சில பொதுவான நண்பர்களும் அதை எள்ளி நகையாடுவதையும் மிகைப்படுத்தி கூறுவதாகவும் பேசிக்கொண்டே இருக்கிறார்.
அவர்கள் ஒரு கருத்து வைத்திருப்பதில் தவறில்லை. ஆனால் உண்மையை தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
இன்று தி இந்து ஆங்கில பத்திரிகையில் வந்துள்ள ஒரு செய்தியை அப்படியே கீழே தருகிறேன்.
---------_----------------------_------_----------------------------------
அது மாலை 3 மணி
கருப்பு முகக் கவசம் அணிந்த முதுகில் தங்கள் உடமைகளை சுமந்த ஏழு பேர் மிகவும் களைப்போடு நடந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களை நிற்க வேண்டுமென்று காவல்துறை வாகனத்தில் வந்திறங்கிய காவல் அதிகாரி சைகை செய்தார்.
இது நடந்தது டெல்லி- குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜீவ் சௌக் பகுதி.
அவர்களிடம் சில கேள்விகளை கேட்டபிறகு அவர்கள் செல்வதற்கு அனுமதித்ததோடு இரண்டு இரண்டு அல்லது மூன்று மூன்று பேராக உரிய இடைவெளி விட்டு செல்ல வேண்டுமென அந்த அதிகாரி அறிவுறுத்தி அனுப்பினார்.
அந்த மனிதர்கள் அனைவரும் சுமைப்பணி தொழிலாளிகள். மானேசரிலுள்ள பிலாஸ்பூர் கிராமத்தில்ஒரு தானியங்கி வாகன நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கொரானா வைரஸின் பரவலைத் தடுக்க நாடு தழுவிய அடைப்பு அறிவிக்கப்பட்ட பிறகு மார்ச் 24 முதல்அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. வாழ்வதற்கான பணமும் கையில் இல்லை. கையிலிருந்த பணம் ஏற்கனவே செலவாகி விட்டது .அவர்களுக்கு உதவுவதற்கு ஆட்கள் கிடையாது. அவர்கள் அத்தனை பேரும் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜகான்பூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள்.
அவர்களின சொந்த ஊருக்கும் வேலை செய்கிற இடத்திற்கும் இடையே 400 கிலோமீட்டர். கையில் பணம் அற்ற நிலையில் நடந்தே செல்வது என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்தப் பத்திரிகையாளர் அவர்களை சந்தித்தபோது ஏற்கனவே அவர்கள் ஆறு மணி நேரம் நடந்திருந்தனர்.
"இன்னும் சில நாட்களுக்கு இந்த முடக்கம் தொடரும். எங்களிடம் பணம் இல்லை .சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லை."
அந்தக் குழுவில் இருந்த மூத்தவரான ரமேஷின் வார்த்தை இது. இதேபோன்று இன்னொரு 7 பேர் கொண்ட குழு கால்நடையாகவே உத்தரப்பிரதேசத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர்களோடு தொடர்பு அறுந்து விட்டதாகவும் அவர் கூறினார். அஜித் இந்த குழுவின் இன்னொரு உறுப்பினர். அவர் சொன்னார் ஹோலிப் பண்டிகை முடிந்து ஒரு வாரத்திற்கு முன்பு தான் வேலைக்குச் சேர்ந்தோம். ஏற்கனவே இருந்த சேமிப்புகள் எல்லாவற்றையும் ஹோலிப் பண்டிகைக்கு செலவழித்து விட்டோம் என்று சொன்னார்.
ஒருநாள் 500 ரூபாய் சம்பாதித்தோம்; ஒரே ஒருநாள் மட்டும் தான் .அடுத்த நாளிலிருந்து ஐம்பது ரூபாய்க்கு தான் வருமானம் இருந்தது. இந்த சம்பளம் நிலையானது அல்ல.
"ஐந்து நாட்களாக வேலை இன்றி இருந்தோம். கொஞ்சம் நஞ்சம் கையிலிருந்த பணமோ செலவாகிவிட்டது "என்று தங்கள் கையறு நிலையை விளக்கினார் .
இன்னொரு தொழிலாளி விஜய் இன் வார்த்தை இது.அவர்களுக்கு வாடகை செலுத்த கூட போதுமான பணம் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர்களில் சிலர் கடந்த 24 மணி நேரமாக சாப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.
தீபக் சொன்னார் எங்கள் கிராமத்தில் ஏதாவது வேலை கிடைத்துவிடும் இப்போதுதான் அறுவடை ஆரம்பித்திருக்கிறது.குறைந்தபட்சம் இந்த கடுமையான சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தோடாவது இருக்கமுடியுமே என்று .
ரமேஷ் சொன்னார் பல சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் எங்களை நிறுத்தினார்கள் .ஆனால் எங்களை விசாரித்த பிறகு விட்டுவிட்டார்கள்.
மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது தங்கள் கம்பெனியிடம் இருந்தோ அந்த நிமிடம் வரை எந்த உதவியும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எத்தனை நாட்கள் ஆகும் வீட்டுக்குச் செல்வதற்கு என்று கேட்டபோது நேர்கொண்ட பார்வையோடு
"இன்னும் 5 அல்லது 6 நாட்கள் நடந்தால் எங்கள் கிராமத்தை அடைந்து விடுவோம்"
என்று பதிலை சொன்னார் .
அந்தக் குழுவில் இருந்த மிகக் குறைந்த வயது உடையவர் தன்னுடைய முடிக்கு கலர் சாயம் பூசி இருந்தார் .அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்
"நான் நேபாளத்தைச் சேர்ந்தவன்.இப்படி நடந்தால் ஊருக்கு செல்ல எத்தனை நாள் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை ."
தமிழில்:Kanagaraj Karuppaiah