tamilnadu

img

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  மீது பனாமா ஆவண முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நாட்ட உச்சநீதிமன்றம் கடந்த 2018ல் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப்  லாகூரில் உள்ள சிறையில்  அடைக்கப்பட்டார். கடந்த அக்டோபர் 22ம் தேதி அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 
தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் லண்டனில் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு 8 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நவம்பரில் நவாஸ் ஷெரீப் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் டிசம்பர் 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் அவருக்கு மேலும் 4 வாரங்கள்  ஜாமின் நீட்டிக்கப்பட்டது. இதேபோல் மேலும் ஜாமின் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் பஞ்சாப் மாகாண அரசிடம் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஆனால் நவாஸ் ஷெரீப் தரப்பு அவரது மருத்துவ சான்றிதழை மட்டும் தாக்கல் செய்தது. இதை மருத்துவ வாரியம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனிடையே நவாஸ் ஷெரீப் லண்டன் வீதிகளில் உலவுவது குறித்த புகைப்படங்கள் வெளியானது. 
இதையடுத்து பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் அரசு நவாஸ்ஷெரீப்பை தலைமைறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊழல் மற்றும் உள் விவகாரங்களுக்கான இம்ரான் கானின் ஆலோசகர் ஷாஸாத் அக்பர் கூறியதாவது
பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப் ஒரு தலைமறைவு குற்றவாளியாக கருதுகிறது. எனவே அவரை ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தனிப்பட்ட தாக்குதலாக பார்க்கக்கூடாது. நவாஸ் ஷெரீப் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் லண்டன் வீதிகளில் உலா வருவது பாகிஸ்தான் நீதித்துறையின் முகத்தில் விழுந்த ஒரு அறை. அரசாங்கத்தால் இதை அனுமதிக்க முடியாது. இதில் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. நாங்கள் சட்டத்தை செயல்படுத்த மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே முயற்சிக்கிறோம். நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்படுவதை விரைவுபடுத்த தேசிய பொறுப்புடமை முகமையை பாகிஸ்தான் அரசு அணுகும். இவ்வாறு அவர் கூறினார்.

;