புதிய மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவத்தை அக்டோபர் மாதத்தில் இருந்து பயன்படுத்தலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகர்கள், தொழில் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டர்னில் மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மத்திய அரசும் மறைமுக வரிகள் வாரியமும் தற்போது புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவத்தை தயார் செய்துள்ளது. இந்த புதிய படிவங்கள் வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையில் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் அக்டோபர் முதல் இந்த மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்னான புதிய படிவம் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய படிவத்தில், வாட் வரி முறையில் உள்ளதைப் போலவே ஒரே படிவமாக, கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி என அனைத்தையும் ஜிஎஸ்டி ரிட்-01 (GST RET-01) படிவத்தில் தயார் செய்யும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்களை, பின்பக்க இணைப்பு 1 மற்றும் 2 (Anx1 & Anx 2) ஆகியவற்றில் தயாரித்துக் கொள்ளலாம்.
தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் வரும் டிசம்பர் மாதம் வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்றும், அதில் உள்ள உள்ளீட்டு வரி பயனையும் இதற்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பினை வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று நிதியமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் விற்பனை விவரங்கள் ஜிஎஸ்டி-ஆர்1 படிவத்தில் தயார் செய்வதற்கு பதிலாக ஜிஎஸ்டி இணைப்பு 1 (Anx 1) பகுதியிலும், இணைப்பு 2 (Anx 2) பகுதியில் கொள்முதல் விவரத்தையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.