ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, ஆண்டு வர்த்தகம் ரூ.1.5 கோடி வரை உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு இலவச ஜிஎஸ்டி சாப்ட்வேர் வழங்குவதாக ஜி.எஸ்.டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் பலருக்கு, இன்வாய்ஸ் உள்ளிட்ட ஜிஎஸ்டி நடைமுறைகளை தாக்கல் செய்வது சிக்கலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் வகையில், ஜிஎஸ்டி சாப்ட்வேர் தயாரிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு இந்த சாப்ட்வேரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, தற்போது இந்த சாஃப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிஎஸ்டி நெட்வொர்க் வெளியிட்ட அறிக்கையில், ”ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வது, பில் தயார் செய்வது போன்றவற்றுக்கு இந்த சாப்ட்வேர் உதவும். ஒரு நிதியாண்டில் ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள், இந்த சாப்ட்வேரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட வரம்பில் 80 லட்சம் சிறு தொழில் செய்வோர் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த சாப்ட்வேர் பயன்படும். மேலும், www.gst.gov.in இணையதளத்தில் இருந்து இந்த ஜிஎஸ்டி சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது.