லக்னோ,டிச.31- உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்க, 5 காலி இடங் களை உத்தரப்பிரதேச அரசு அடையாளம் கண்டுள்ளது. பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மிர்சாபூர், சம்சுதின்பூர், சாந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 காலி இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 15 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிக்கு வெளியில் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் யாவும், நெடுஞ்சாலை பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், இஸ்லாமியர்கள் மிக எளிதாக பயணித்து, மசூதிக்கு செல்லமுடியும் என உத்தரபிரதேச அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.