விவசாய சங்க கிளை துவக்கம்
அரியலூர், ஜூன் 6-தமிழ்நாடு விவசாய சங்க புதிய கிளை, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா பாகல்மேடு கிராமத்தில் துவங்கப்பட்டது. கே.சுசிலா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சி.உத்திராபதி சங்க கொடியேற்றி புதிய கிளையை துவக்கி வைத்தார். மாவட்டக்குழுஉறுப்பினர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டார்.ஒன்றியச் செயலாளராக கே.பூபாலன் தேர்வு செய்யப் பட்டார். தலைவராக வெ.பெரியசாமி உள்பட 11 பேர் கொண்ட குழுவாக புதிய கிளை துவங்கப்பட்டது.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியவர் கைது
தரங்கம்பாடி, ஜூன் 6-நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் லஞ்சம் பெறுவதாக வந்தபுகாரையடுத்து வியாழன்று திடீரென அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் அருண்பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். இதில் நில அளவை பிரிவு அலுவலர் நடராஜ்(27)என்பவர் புதுச்சேரியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக பெற்றதாக உறுதிசெய்யப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடராஜை கைது செய்தனர். இந்த திடீர் சோதனையால் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகள் அட்டகாசம்: மரங்கள், சோலார் மின்வேலி சேதம்
திருநெல்வேலி, ஜூன் 6-வடகரை பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்ததில் தென்னை, மா மரங்கள் மற்றும்சோலார் மின் வேலிகள் சேதமடைந்தன.நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், வடகரை கிராமப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகளுக்கு நிலங்கள் உள்ளன.இதில், தென்னை, வாழை, மா, கத்தரி உள்ளிட்ட பல்வேறுபயிர்களை பயிரிட்டுள்ளனர் இப்பகுதியில் கடந்தஒரு மாதகாலமாக காட்டு யானைகள் இரவு நேரங்களில்விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா, வாழைசோலார் மின் வேலிகளை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்தகாட்டு யானைகள் கூட்டம் சென்னாபத்து ராயர்காடு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ஷேக்உசேன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை, மாமரங்கள் மற்றும் மின்வேலிகளை சேதப்படுத்தி உள்ளன.இதனால் விவசாயிகள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.
பளுகல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
நாகர்கோவில், ஜூன் 6-கேரள மாநிலம் காரக்கோணம் விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி லதா (48). இவர்புதனன்று குமரி மாவட்டம் பளுகல் அருகேராமவர்மன்சிறை பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் லதாவின் முன்னால் வந்து நின்றனர். இருசக்கரவாகனத்தில் பின்னால் இருந்த நபர் லதாவின் கழுத்தில் கிடந்த இரண்டே கால் பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதுகுறித்து லதா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.