அருமனை:
ஸ்ரீராஜுவுக்கு தூரிகை மீது அலாதியான விருப்பம். வறுமையிலும் அதையே சாதனையாக்கும் துடிப்போடு 13 மீட்டர் நீள தூரிகையால் கேரளத்தின் மறுமலர்ச்சி நாயகன் அய்யங்காளியின் ஓவியம் தீட்டியுள்ளார். கின்னஸ் சாதனைக்கான அவரது முயற்சியை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
அய்யங்காளியின் ஓவியம் தீட்ட காகிதம், அட்டைகள், பசை. கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி 80 கிலோ எடையும் 13 மீட்டர் நீளமும் கொண்ட பிரமாண்டமான தூரிகையை ஸ்ரீராஜ் உருவாக்கினார். ஜேசிபி இயந்திரம் மூலம் தூரிகையை தூக்கி தனது தோளால் கட்டுப்படுத்தி சுமார் 48 நிமிடங்களில் இந்த ஓவியத்தை ஸ்ரீராஜ் வரைந்தார். சிறிய அளவிலான ஆர்டிஸ்ட் பாயின்ட் பிரஷை பயன்படுத்தி மட்டுமின்றி ராட்சத அளவிலான பிரஷ் பயன்படுத்தியும் ஓவியம் தீட்டலாம் என்பதை உணர்த்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டதாக கூறுகிறார் ஸ்ரீராஜ். ஏற்கெனவே அமெரிக்காவை சேர்ந்த ஒரு குழுவினர் 11 மீட்டர் நீளமுள்ள பிரஷை பயன்படுத்தியது கின்னஸ் சாதனையாக உள்ளது. எனவே நிச்சயம் எனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நம்புகிறேன் என ஓவியர் ஸ்ரீராஜ் தெரிவித்தார்.
இதற்காக 12 நாட்கள் உழைப்புடன் ரூ.20 ஆயிரமும் செலவாகியுள்ளது. இதற்கு திருவனந்தபுரத்தில் செயல்படும் டோம் அறக்கட்டளை உதவியது. இவரது சாதனை முயற்சி குறித்த செய்தி பல்வேறு தமிழ், மலையாள ஊடகங்களில் வெளியாகின. இதற்கு முன்பும் பல சாதனைகளை படைத்துள்ள இந்த கலைஞனின் வாழ்க்கை துயரங்களை விரட்ட அவரது திறன் பயன்படவில்லை.தமிழகத்தின் கடைக்கோடியில் கேரள எல்லையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்ஞாலுமூடு சிறக்கரை பகுதியில் வசிக்கிறார் ஸ்ரீராஜ் (29). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் சுசீலா முந்திரி ஆலைத் தொழிலாளி. அந்த தொழில் நலிவடைந்த நிலையில் கூலி வேலைகளுக்கு சென்றார். போதிய வருவாய் இல்லாத நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறார்.
ஸ்ரீராஜ் கேரள மாநிலம் நெய்யற்றின்கரையில் உள்ள தனியார் ஐடிஐ-யில் மின்னணுவியல் படித்து வந்தார். வறுமை காரணமாக ஒன்றரை ஆண்டுகளில் பயிற்சியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது ஓவியத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஸ்ரீராஜின் வருவாய் தனது விதவைத் தாயாரைக்கூட தன்னுடன் வைத்து பாதுகாக்க முடியாததாகவே உள்ளது. ஆனாலும் தனது மகனது திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ள தாயார் மகனுக்கு உதவி வருகிறார். சிறக்கரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டைத் தவிர எந்த வசதி வாய்ப்பும் இல்லாத அவல நிலையில் உள்ளார். குடத்தில் எரியும் விளக்காக இருளில் தவிக்கும் இந்த கலைஞனின் வாழ்வில் ஒளியேற்ற அரசுகள் முன்வருமா?
(ந.நி.)