உலகின் 17 நாடுகளில் உள்ள 180 கோடி மக்கள் (25 சதவீத மக்கள் தொகை) , கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக உலக நீர்வள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, உலகின் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை எதிர்கொள்கின்றன. உலக நாடுகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து உலக நீர்வள ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகில் சுமார் 17 நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் பல பூஜ்ய நாளை ( நீர் முழுவதும் தீர்ந்து போகும் நாள்) நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டான், லிபியா, குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், சான் மரினோ, பக்ரைன், இந்தியா, பாகிஸ்தான், ஓமன், துர்மெனிஸ்தான், போட்ஸ்வானா, எரிட்ரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள், சுமார் 80 % நிலத்தடி நீர் விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளில் சிறிய அளவிலான வறட்சி கூட பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில், தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ள 17 நாடுகளின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவின் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலங்கள், கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன.
இதை தொடர்ந்து, அதிக தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகள் பட்டியலில், மெக்சிகோ, நேபாளம், போர்ச்சுக்கல், மொராக்கோ, ஈராக் உள்ளிட்ட 27 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் 40 % நிலத்தடி நீரை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், நிலத்தடி நீர் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, சுவீடன், அயர்லாந்து, மலேசியா, வங்க தேசம், மியான்மர், உள்ளிட்ட 50 நாடுகள் இடம்பெற்றுள்ளன.