அமெரிக்காவில் போலீசாரால் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு போராட்டம் பரவி உள்ளது.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது விசாரணை அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார். இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் 25 நகரங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் கட்டிடங்கள் வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளது. இதையடுத்து அங்கு கலவரசூழல் மூண்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கலவரத்திற்கு பின்னர் தற்போது தேசிய பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. மாகாண ஆளுநர் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
மொத்தம் 11 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் தேசிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு படையினரின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் மாகாணங்களில் கலிபோர்னியா, ஜார்ஜியா, மினசோட்டா, மிசோரி, நெவாடா, ஓஹியோ, டென்னசி, டெக்சாஸ், உட்டா மற்றும் வாஷிங்டன் மாகாணமும் அடங்கும்.இதனிடையே உத்தரவு பிறப்பிக்கப்படும் 4 மணி நேரத்தில் ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.