tamilnadu

img

கொரோனாவின் தாக்கம் பல ஆண்டுகள் தொடரும் - உலக சுகாதார அமைப்பு

உலகில் கொரோனாவின் தாக்கம் பல ஆண்டுகள் தொடரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக அளவில் 17766836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 683218பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில் கொரோனா தொற்று ஒரு வகையான பேரழிவு என்றும் இதன் தாக்கம் பல பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும் பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளும் தற்போது உயர்வை சந்தித்து வருகின்றன. பொருளாதார பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா , பிரேசில், பிரிட்டன் ,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் சமீப வாரங்களாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திய சில நாடுகள் இரண்டாவது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.