அமெரிக்காவில், குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் 168 வகையான குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை, எச்.பி.பி.எஃப் அமைப்பு சோதனை மேற்கொண்டது. இந்த ஆய்வில், குழந்தைகளின் உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நான்கில் ஒரு உணவுப்பொருளில் அர்செனிக், காரீயம், கேட்மியம் மற்றும் பாதரசம் போன்ற நச்சு பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இம்மாதிரியான உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது, அவர்களின் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்படுகிறது, மேலும் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
மிகவும் நச்சுத்தன்மை உடைய உணவுகளின் பட்டியலில், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட அரிசி சார்ந்த பொருட்கள், பிஸ்கெட்டுகள், ஆப்பிள் மற்றும் திராட்சை சாறுகள், ஓட்ஸ் தானியங்கள், மக்ரோனி (உலர் பாஸ்தா) மற்றும் சீஸ், பப்ஸ் வகை தின்பண்டங்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் வழக்கமாக உட்கொள்ளும் பிற உணவுகள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.