tamilnadu

மே 09 இந்நாள் இதற்கு முன்னால்

1865 - நான்காண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற, அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுற்றதாக, குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜான்சன் அறிவித்தார். 1860 தேர்தலில், அடிமை முறையைத் தடைசெய்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் மிகப்பெரிய வெற்றிபெற்றார். விவசாய (குறிப்பாகப் பருத்தி) உற்பத்தி பெருமளவிலிருந்த தென்பகுதி மாநிலங்கள், ஆப்ரிக்க-அமெரிக்க அடிமைத் தொழிலாளர்களைச் சார்ந்திருந்தன. இவற்றில் சிலவற்றின் மக்கள்தொகையில் 49 சதவீதம்வரை அடிமைகள் இருந்தனர். பெருந்தொகை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகளை விடுதலைசெய்வதுவிட்டு, ஊதியமளித்து விவசாயம் செய்வது இரட்டிப்பு இழப்பாக இருக்கும் என்று அஞ்சிய 7 மாநிலங்கள், லிங்கன் குடியரசுத்தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பே, அமெரிக்காவிலிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்து, ராணுவத்தையும் கட்டமைத்தன. மாநில உரிமைகளில் தலையிடப்போவதில்லை என்று லிங்கன் அறிவித்தார். பழைய, புதிய குடியரசுத்தலைவர்கள் இருவருமே பிரிந்துசென்ற கூட்டணி மாநிலங்களின்மீது போர்தொடுக்கும் திட்டமில்லை என்று அறிவித்தாலும், தெற்கு-கரோலினாவிலுள்ள சம்ட்டர் கோட்டையை கூட்டணிப்படைகள் 1861 ஏப்ரல் 12இல் தாக்கியதைத் தொடர்ந்து உள்நாட்டுப்போர் தொடங்கியது. மேலும் 4 மாநிலங்கள் கூட்டணியுடன் இணைந்து, போர் தீவிரமடைந்ததால், அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்படும் கூட்டணிப் பகுதியிலிருக்கும் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டவர்களாவார்கள் என்ற உத்தரவை 1862இல் லிங்கன் பிறப்பித்தார். இப்பகுதியிலிருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பருத்தியைச் சார்ந்திருந்ததால் ஐரோப்பிய நாடுகள் துணைக்குவருமென்ற கூட்டணியினரின் நம்பிக்கை பொய்த்துப்போனது. போரிடும் அமைப்பு என்ற தகுதியை அளித்த பிரிட்டனும், பிரான்சும்கூட (அடிமை முறைக்கெதிரான போர் என்பதால்), கூட்டணியை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. அப்போது மிகச்சிறியதாக இருந்த அமெரிக்கக் கடற்படை, கூட்டணிப்பகுதிகளின் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காகவே மிகப்பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. தோல்வியின் விளிம்புக்குச்சென்ற கூட்டணிப்படைகள் படிப்படையாகச் சரணடைந்தநிலையில், 1865 ஏப்ரல் 14இல் கூட்டணி ஆதரவாளர் ஒருவரால் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். 237 பெயரிடப்பட்ட யுத்தங்களாக நான்காண்டுகள் நடந்த போரில் சுமார் 17 லட்சம் பேர்வரை பலியாயினர். தொழிற்புரட்சியால் உருவான புதிய கருவிகளின் தொடக்ககாலப் போராக இது குறிப்பிடப்படுகிறது.அறிவுக்கடல்