அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளியில் ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள், கடந்த 1997 முதல் 2007 வரை 7 பாகங்களாக வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு அதிக வசூல் ஈட்டின. இந்நிலையில், அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளி ஒன்றில் ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் யாரும் இனி அந்த புத்தகங்களை படிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பள்ளி நூலகத்தில் இருந்த ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
இது குறித்து பள்ளியின் பாதிரியார் டான் ரீஹில் மாணவர்களின் பெற்றோருக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். அதில், “ஹாரி பாட்டர் புத்தகங்கள் நல்ல மற்றும் தீய சக்திகளை முன்வைத்து கற்பனையாக எழுதப்பட்டிருந்தாலும், அது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை. அந்த புத்தகங்கள் கற்பனையாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாபங்களும் மந்திரங்களும் உண்மையானவை. இதை ஒருவர் படிக்கும்போது அவை தீய சக்திகளை கொண்டுவந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்கா மற்றும் ரோம் நாட்டில் இருக்கும் பேய் ஓட்டுபவர்கள் பலரிடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர்களும் இந்த புத்தகங்களை அப்புறப்படுத்துமாறு பரிந்துரைத்தனர்” என கூறியிருந்தார்.