சென்னை, மே 12- விழுப்புரத்தில் சிறுமியை கொலை செய்த குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி உயிரோடு சிறுமியை எரித்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் இருந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்” தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கிடையே குற்றவாளிகள் இருவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.