தொடரும் மின்தடை... வீதியில் உறங்கும் பொதுமக்கள் தரங்கம்பாடி, மே 22 -நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கிராமங்களில் தொடர் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகையில், தாலுகா முழுவதும் தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக திருவிளையாட்டம், கொத்தங்குடி, ஆக்கூர், டி.மணல்மேடு, திருக்கடையூர், கீழையூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் வீதிகளில் வந்து உறங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரமலான் நோன்பு திறப்பு
திருச்சிராப்பள்ளி, மே 22 -
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எல்கேஎஸ் மஹாலில் செவ்வாயன்று மாலை தி முஸ்லிம் லிட்டரரி சொசைட்டி சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் முகமது உஸ்மான் தலைமை வகித்தார். மாவட்ட அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் ஆலிம் முன்னிலை வகித்தார். ஜமாஅத் பேரவை பொதுச் செயலாளர் சையது ஜாபர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் நோன்பு கஞ்சி அருந்தினர். பின்னர் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டனர்.
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் விவசாயிகள் கோரிக்கை
சீர்காழி, மே 22-நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள 200 கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் நாய் போன்ற செல்ல பிராணிகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த அதிக வெப்பத்தால், கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்ற வருடம் கோடை காலத்தில் பல மாடுகளும், ஆடுகளும் கோமாரி நோய் தாக்கி இறந்துள்ளன. எனவே இந்த வருடம் கால்நடைகளை நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்கள் தோறும் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவும் மருந்து, மாத்திரைகள் வழங்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உபகரணங்கள் வழங்கல்
அறந்தாங்கி, மே 22 -
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடு வீடாக குப்பை வாங்கும் துப்புரவு பணியாளர்களுக்கு 6 வகையான பாதுகாப்பு உபகரணங்களான மழை கோட், கையுறை, தலைகவசம், முககவசம், பிரதிபலிக்கும் சட்டை, கம்பூஸ்ட் ஆகியவற்றை நகராட்சி ஆணையர் ஆர்.வினோத் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேலாளர் முத்துக்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் அன்பழகன், சுகாதார ஆய்வாளர் எஸ்.சேகர், அனைத்து துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்
திருநெல்வேலி மே 22-நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம் ராதாபுரம், தாலுகா தலைநகராக விளங்குகிறது. இவ்வூரை சுற்றி காரியாகுளம், நெடுவாழி, பாப்பான்குளம், பாவரித்தோட்டம், செம்மண்குளம், மகேந்திரபுரம் போன்ற குக்கிராமங்கள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இங்குள்ள நீர்நிலைகள் வற்றி காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதால், ராதாபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் கவனக்குறைவால் பெரும்பாலான வார்டுகளில் பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராதாபுரம் கணபதிநகர், கருவூலபகுதிக்கு தெற்கு, 2வது வார்டு மாதா கோயில் தெரு, 4வது வார்டு ஆகிய பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராதாபுரம் அன்னை நகரில் அரசு இலவச வீடுகளை கட்டித் தந்துள்ளது. இந்த வீடுகளில் குடியிருக்கும் மக்களின் தேவைகளுக்காக குடிநீர் இணைப்பு ஒன்று வழங்கப்பட்டு இருந்தது. இது பழுதாகி பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை. குடிநீர் விநியோகமும் இல்லை. ராதாபுரம் 2வது வார்டிலும் இதுபோலவே குடிநீர் விநியோகிக்கப்பட்டு பல நாட்களாகிறது. ராதாபுரத்திற்கு தெற்கே அமைந்துள்ள காட்டாறு என்றழைக்கப்படும் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு ராதாபுரம் நகருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாதம் வரை எவ்வித தடங்கலுமின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதால் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆழ்துளை கிணறுகளில் நீர் உறிஞ்சும் குழாய்களின் ஆழத்தை அதிகரித்தால் நீரேற்ற வாய்ப்பு கிடைக்கும். மீண்டும் தடையின்றி சீராக குடிநீர் விநியோகிக்கலாம். ஆனால் இவ்விஷயத்தில் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே இனியாவது காட்டாறு ஆழ்துளை கிணறுகளில் குழாய்களை மாற்றி தடையின்றி குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.