புதுக்கோட்டை, மே 31-புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(40). இவருக்கு இடது கையும், இடது காலும் திடீரென செயல் இழங்துவிட்டதால் கடந்த 23-ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் அனுமிக்கப்பட்டார். அவரால் பேசவும் முடியவில்லை. அவருக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதித்தபோது வலதுபக்க மூளையில் செல்லும் ரத்தம் குறைவாக காணப்பட்டது. இதனை அடுத்து கல்லூரி முதல்வர் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் ஆலோசனையின் பேரில் அவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ஆல்டிபிளேஸ் மருந்து உடலுக்குள் செலுத்தப்பட்டது. மருந்து செலுத்தப்பட்ட 20 நிமிடத்தில் அவருக்கு கை, கால்களில் அசைவு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையின் மூலம் மூன்றாவது நாளே அவரால் பேசவும் நடக்கவும் முடிந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறும்போது: சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கே பக்கவாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. பக்கவாத நோய் முழுமையாக குணமடைய ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் கால அவகாசம் வேண்டும். பிசியோதெரபி சிகிச்சையும் அடிக்கடி தேவைப்படும். ஆனால், ரத்தக் குழாயில் ரத்தம் உறைவதால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஆல்டிபிளேஸ் மருந்தை செலுத்துவதன் மூலம் ரத்தக்கட்டிகள் எளிதில் கரையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். பிசியோதெரபி செய்யத் தேவை இருக்காது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தமுறையில் சிகிச்சை அளிப்பது இதுவே முதல்முறை என்றார்.