மன்னார்குடி ஆக 10- சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு அறிக்கையை வங்கி தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான காமகோடி வெளியிட்டு நிருபர்களிடம் பேசியதாவது: கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு கணக்கு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.71ஆயிரத்து 306 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்பு தொகை ரூ.39 ஆயிரத்து 77 கோடியாகவும், கடன்கள் ரூ.32 ஆயிரத்து 229 கோடியாகவும் உள்ளது. நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.186 கோடியாகவும் , நிகர வராக்கடன் 1.89 சதவீதமாகவும் உள்ளது. மேலும் வங்கியின் சொத்து மீதான வருவாய் 1.63 சதவீதமாகும். கடந்த காலாண்டில் ரூ.4 ஆயிரத்து 317 கோடியாக இருந்த வங்கியின் நிகர மதிப்பு தற்போது ரூ.4 ஆயிரத்து 978 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி இதுவரை 650 கிளைகளுடன் ஆயிரத்து 717 ஏடிஎம் மையங்களுடனும், 9 ஆயிரத்து 818 வணிக முனை பயன்பாடு இயந்திரங்களையும் (பாயிண்ட் ஆப் சேல்) கொண்டு இயங்கி வருகிறது. மேலும் புதிய செல்போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய இடத்துக்கே சென்று பணம் மற்றும் காசோலை வசூல் செய்யும் வசதி தொடங்கப்படவுள்ளது. வங்கி கிளை இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏஜெண்டுகள் மூலமாக வங்கி சேவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்கள் இருப்பிடம் சென்று காசோலை மற்றும் ஏடி.எம் கார்டு வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தங்கள் சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிமாற்றம் அனைத்து நேரத்திலும் மாற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்வாக இயக்குனர் காமகோடி கூறினார்.