tamilnadu

img

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வித்து தோழர் பி. எஸ். தனுஷ்கோடி

சாத்தன் - அமிர்தம் தம்பதியினருக்கு 1923 பிப்ரவரி 3 அன்று மகனாக பிறந்தவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி. தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தபோது தோழர் பி.சீனிவாசராவும், கே.ஆர்.ஞானசம்பந்தமும், ஜி.வீரையனும் உதவியுள்ளார்கள். இப்படிப்பட்ட சிரமங்கள் பலநேரங்களில் தனுஷ்கோடி குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகுதான் தென்பரை இயக்கம், நாணலூர் கலவரம், நிலபிரபுக்களுக்கும் விவசாய சங்கத்திற்குமிடையே ஏற்பட்ட முதல் ஒப்பந்தம், சாட்டையடி சாணிப்பால் நிறுத்தம், வெண்மணி படுகொலை என ஏராளமான நிகழ்வுகள், தலைமறைவு மற்றும் சிறைவாசம் என நெஞ்சை உருக்கும் வரலாற்றில் பி.எஸ்.தனுஷ்கோடியின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. 1964-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது, அதை தஞ்சை மண்ணில் உருவாக்குவதில் முழுமூச்சுடன் செயலாற்றினார். அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார்.

1962-ம் ஆண்டில் இந்திய - சீனா எல்லை மோதல் நடைபெற்ற சமயத்திலும் 1975-ம் ஆண்டில் அவசரநிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டபடி கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். 1958-ம் ஆண்டில் பாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். 1970-ம் ஆண்டில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எஸ்.தனுஷ்கோடி 1973-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். மீண்டும் 1986-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டங்கள் தான் எழுதப் படிக்கத் தெரியாத தனுஷ்கோடியை மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு இட்டுச்சென்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக ஊர் பஞ்சாயத்தால் கட்டி வைத்து அடிக்கப்பட்டவர்களை இன்று மேல்சாதியினர் சம்பந்தப்பட்ட பல பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் தலைவர்களாக கம்யூனிஸ்ட் இயக்கம் உயர்த்தியுள்ளது. தனுஷ்கோடி - மனோன்மணி தம்பதியருக்கு புருஷோத்தமன், அசோகன் என்ற இருமகன்கள், விஜயலெட்சுமி, சுசீலா, சித்ரா என்ற மூன்று மகள்கள், கிருஷ்ணவேணி, மாலதி என்ற இரு மருமகள்கள், குணசேகரன், செல்வராஜ் என்ற இரு மருமகன்கள் அவர்கள் ஈன்றெடுத்த பேரன்கள், பேத்திகள் என அந்த குடும்பங்கள் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளன. உங்கள் வாழ்வில் எதை பெருமையாக கருதுகிறீர்கள் என்று பி.எஸ்.தனுஷ்கோடியிடம் கேட்டபோது, “எழுத படிக்க தெரியாத பண்ணை அடிமையாக இருந்த என்னை வர்க்க உணர்வுபெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழியனாக தலைநிமிரச் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருப்பதையே பெருமைக்குரியதாக கருதுகிறேன்” என்றார். அந்த வகையில்  தோழர் பி.எஸ்.டியால் உருவாக்கப்பட்ட இன்றைய புதிய தலைமுறையினர் அவர் வாழ்க்கையின் அடிச்சுவட்டை பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் சிறந்த செவ்வணக்கம் ஆகும்.

- ஐ.வி.நாகராஜன்